chennireporters.com

முன்னாள் அமைச்சர் மணி கண்டனை நடிகை வழக்கில் இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி அளித்த புகாரில், சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, தனிப்படை போலீசார், பெங்களூரில் வைத்து, கடந்த ஜூன் 20 ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஜாமின் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது இதனிடையே 5 நாட்கள் காவலில் எடுத்து மணிகண்டனிடம் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை, சைதாப்பேட்டை கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, ஐகோர்ட்டில் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று முறையிடப்பட்டது.

அப்போது, காவல்துறை தரப்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையுடன் பேசுவதற்காக, பிரத்யேக செல்போன் ஒன்றை பயன்படுத்தி உள்ளார்.

அது மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது அதனால், அங்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று வாதிடப்பட்டது.

மணிகண்டன் தரப்பில், ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும், ஏற்கனவே 24 மணி நேரம் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை.

கைது செய்யப்பட்டு 8 நாட்கள் கழித்து அரசியல் காரணங்களுக்காக காவல்துறை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது ஆட்சி மாற்றத்திற்கு பின் அரசியல் பழிவாங்கும் நோக்கதுடன் இத்தகைய புகார் தன் மீது அளிக்கப்பட்டுள்ளது என்று மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நடிகையுடன் மணிகண்டன் பேச பயன்படுத்திய செல்போன் மதுரையில் அமைச்சரின் வீட்டில் இருப்பதால் அவரை காவலில் எடுக்கு வேண்டிய அவசியம் உள்ளது.

ஆகவே, இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், போலீஸ் காவலில் விசாரிப்பதை ஊடக விசாரணைக்கு பயன்படுத்த கூடாது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்றும் காவல்துறைக்கு அறிவுறித்திய நீதிபதி, காவலில் எடுக்க அனுமதி மறுத்த சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க.!