chennireporters.com

கிருஷ்ணகிரி அருகில் காதல் திருமணம் செய்த இளைஞர் ”ஆணவப்படுகொலை.”

கிருஷ்ணகிரி அருகே பட்டப்பகலில் பயங்கரம் காதல் திருமணம் செய்த இளைஞரை  கூலிப்படையினரை வைத்து ஆணவக்கொலை செய்த பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த மாமனார் குடும்பத்தினர் நடுரோட்டில் புதுமாப்பிள்ளையை அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்து ஆணவக்கொலை செய்யும் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் ஜெகன் (வயது 28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர். சரண்யாவும் ஜெகனும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

சரண்யா

ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெகனை அவருடைய மாமனார் சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொலை செய்ய திட்டம் போட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் அதாவது 21.3.2023 செவ்வாய் கிழமை அன்று மதியம் சுமார் 2 மணி அளவில் ஜெகன் வேலைக்கு செல்ல மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் அணைரோடு மேம்பாலம் அருகே இணைப்பு சாலையில் (சர்வீஸ் ரோடு) ஜெகன் சென்று கொண்டு இருந்தார்.

இதை அறிந்த சரண்யாவின் தந்தை சங்கர்  கூலிப்படையினர் மற்றும் உறவினர்களுடன் சென்று  ஜெகனை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர். மேலும் அரிவாளால் அவரின் கழுத்தையும் அறுத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

ஜெகனை கொலை செய்யும் போது பொது மக்கள் யாரும் தடுக்கவில்லை. செல் போனில் வீடியோ மட்டுமே  எடுத்தனர்.  ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடையாமல் அமைதியாக கடந்து சென்றனர்.

அதன் பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஊர் மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஜெகனின் உடலை சாலையில் இருந்து எடுக்கவிடாமல் மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட  எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர், டிஸ்.பி. தமிழரசி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஜெகன்

போலீசார் ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த ஆணவக்கொலை தொடர்பாக ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் மீது காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமனார் தனது உறவினர்களுடன் சேர்ந்து  மருமகனை நடுரோட்டில் வெட்டி ஆணவக்கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த இந்த கொலையை அந்த வழியாக சென்றவர்கள் தங்களின் செல்போன்களில் தூரமாக இருந்தவாறு படம்பிடித்தனர்.

ஜெகனை ஒருவர் கால்களை பிடித்துக் கொள்ள, 2 பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

”ஒரே சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வசதி, வாய்ப்பில் தன்னை விட குறைவாக இருந்தால் மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளமாட்டோம் கொலை தான் செய்வோம் என்பதையே காட்டுகிறது இந்த ஆணவப்படு கொலை.”

 

இதையும் படிங்க.!