கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.6. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்படுகிறார். என்று விசிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் நீக்கப்பட்டது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா வெளியேறி தமிழ்நாடு வெற்றி கழகத்தில் இணைந்து விடுவார் என்றும் அந்த கட்சியில் அவர் பொதுச் செயலாளர் பதவி பெற்றுவிடுவார் என்றும் பேசப்படுகிறது.
மறுபுறம் அவர் அதிமுகவில் இணையகூட வாய்ப்பு இருப்பதாக சொல்லுகிறார்கள். வரும் சட்ட மன்ற தேர்ரலில் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டால் தமிழ்நாடு வெற்றிகழகம், அதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் ஒரு புதிய கூட்டணியை உருவாகலாம். விஜய் ஏற்கனவே தன்னுடைய முதல் கட்சி மாநாட்டில் வெளியிட்டதை போல விடுதலை சிறுத்தைகளுக்கு ஆட்சியில் பங்கு வகிக்க ஆதவ் அர்ஜுனா போட்ட முதல் பிள்ளையார் சுழி என்கின்றனர் இன்னும் சில நாட்களில் ஆதவ் அர்ஜினாவின் நடவடிக்கைகள் எப்படி அமையும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.