சர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கு என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.
விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.“The first of April is the day we remember what we are the other 364 days of the year ” – Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம். பிரபலம் “முட்டாள்கள் தினம்” ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.
புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், ” பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.
இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்துவைத்தார். இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.
” எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது. ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.
இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ‘பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்காட்லாந்தில் April Fool’s Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.
அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்”, இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர். பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர்.
இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் “ஏப்ரல் மீன்” என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர். 1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் பூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.. ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது. அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.
ரோமர்களின் மூடநம்பிக்கையின்படி புளூட்டோ என்ற கடவுள் பிராஸர்பினா என்ற யுவதியைக் கீழ் உலகிற்கு கடத்திச் சென்றதாகவும்,அவள் அழுது தன் தாயை உதவிக்கு அழைத்தாகவும், அவள் தாயோ அவளின் அழுகை சப்தத்தைக் கேட்டு இல்லாத இடத்தில் தேடியதாகவும் இந்தத் தவறான தேடுதலே முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
பைபிளின்படி நோவா தான் முதல் முட்டாள் எனச்சொல்லப்படுகிறது. காரணம் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு பூமி காய்வதற்கு முன்னால் நோவா ஒரு புறாவை அனுப்பி காய்ந்த, வறண்ட நிலத்தை தேடச் சொல்கிறார். ஈரமான பூமியில் காய்ந்த நிலம் எங்கே இருக்கும்? அதனால் தான் அவர் ஒரு முட்டாள் என்றும் அதை மையமாக வைத்தே முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது.
13 ஆம் நூற்றாண்டில் பிரிட்டஷில் வாழ்ந்த ஜான் என்ற மன்னர் எங்கே படையெடுத்துச் சென்றாலும் அந்தப்பகுதி “பொதுச்சொத்தாக” ஆக்கப்பட்டுவிடும். கௌதம் என்ற பகுதியில் நாட்டிங்கம்ஷைர் என்ற ஊருக்குள் அவர் படையெடுத்து வரும்போது அவ்வூர்வாசிகள் தங்களின் ஊரை மன்னர் அபகரித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை முட்டாள்களாக ஆக்க நினைத்து தண்ணீரில் நீந்துகின்ற மீனைப்பிடித்து தரையில் விடுவதும், பிறகு மீண்டும் நீரில் விடுவதுமான பல முட்டாள்தனமான காரியங்களைச் செய்கின்றனர்.
அவர்களின் முட்டாள்தனங்களைக்கண்ட மன்னர் அவர்களைத் தண்டிக்கிறார். இது தான் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இன்னும் இவை போன்ற பல கற்பனைக் கதைகளும் புராணக்கதைகளும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இதுதான் உண்மையான வரலாற்றுப் பின்னணி என்று சொல்லப்படுவது இதுதான். காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக் காரணம்.
அதாவது கி.பி. 1582 வரை ஃபிரான்ஸில் ஏப்ரல் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாகவும்,மார்ச் மாதம் ஆண்டின் இறுதியாகவும், மார்ச் 25 ல் இருந்து ஏப்ரல் 1 வரை புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் உலகம் முழுவதும் நடைபெற்று வந்தன. “கிரிகோரி” என்கிற போப் தான் இன்று நடைமுறையில் இருக்கின்ற ஆங்கிலக் காலண்டரை உருவாக்கியவர். அதாவது ஜனவரியை ஆண்டின் முதல் மாதமாகவும் டிசம்பரை ஆண்டின் இறுதி மாதமாகவும் வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் காலண்டரை பலர் ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர் பழைய காலண்டர் முறையையே பின்பற்றி வந்தனர்.
புதிய காலண்டர் முறைப்படி மாறியவர்கள் பழைய காலண்டர் முறையைப் பின்பற்றி நடப்பவர்களை முட்டாள்கள் என கேலி பேசவும், கிண்டலடிக்கவும் ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் அனுசரிக்கக் காரணமாக அமைந்து விட்டது.
ஃபிரான்ஸிலிருந்து லண்டன், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, கரீபியன், ஜமைக்கா, கானா போன்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்து இன்று உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. இந்த முட்டாள்கள் தினத்தன்று சில நல்ல விஷயங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும் கூட உலகில் நடந்திருக்கிறது.
சிறை தண்டனை பெற்ற ஹிட்லர்; 1924ஆம் ஆண்டு அடால்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்று வெளிவந்துவிட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கி; கடந்த 1935 ஆண்டு ஏப்ரல் முதல் நாள் தான் இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
நயா பைசா அறிமுகம்; ஏப்ரல் ஒன்று 1957 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
புலிகள் காப்பகம்; கடந்த 1973 ஆண்டு ஏப்ரல் ஒன்னு அன்று தான் நமது இந்திய அரசு, புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டத்தை இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கியது
ஆப்பிள் நிறுவனம்; 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தினத்தன்று தான் ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
ஈரான் நாடு; கடந்த 1979 ஆம் ஆண்டு இன்றைய தினத்தன்று தான், ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.
வால்வெள்ளி; ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்ததும் கடந்த 1997 ஆண்டு இன்றை தினம் அன்று தான்.
ஒருபால் இனத்தவருடனான திருமணம்; கடந்த 2001 ஆண்டு ஏப்ரல் முதல் தினத்தன்று, நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
கூகுள் மின்னஞ்சல்; 2004 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, கூகுள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ள ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதை முதலில் உலக மக்கள் முட்டாள் தினத்திற்கான ஏற்பாடு என கருதினர். பின் இது உண்மையாகவே வெளியிடப்பட்டது.
நம்ம இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா நிறுவப்பட்ட நாளின்று. இந்தியாவில் ஏறத்தாழ 200க்கும் மேற்ப்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் அதிகமானவை தேசியப்பூங்காவாக அறிவிக்கப் பட்டு அரசால் சுற்றுலா ஊக்குவிக்கப்படும் இடங்களாக உள்ளன. பல்வேறு பட்ட புவியியல் அமைப்புகள், மாறுபட்ட சீதோஷன நிலைகள், கணக்கிட முடியாத வகைகளில் விலங்கினங்கள் மற்றும் பறவைகள் என ஒவ்வொரு தேசியப் பூங்காவும் அதிசயங்களை அள்ளித்தந்தாலும் அதில் சில வேறெங்கும் நமக்கு கிடைக்காத காட்சிகளையும், அனுபவங்களையும் தரக் கூடியது
இதிலே நம்ம இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா (Jim Corbett National Park). இது 1936-ல் நிறுவப்பட்டது. உத்தராகண்டம் மாநிலத்தில், மேற்கு இமயமலை அடிவாரத்தில் சுமார் 920.9 ச.கி.மீ பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது. ஆரம்பத்திலே எய்லி தேசியப் பூங்கா என்றழைக்கப்பட்டுப் பின்னர் புகழ்பெற்ற வேட்டைக்காரரும், இயற்கைப் பாதுகாவலரும், நூலாசிரியருமான ஜிம் கார்பெட்டின் பெயர் சூட்டப்பெற்றது.
இது புகழ்பெற்ற புலிகள் வாழிடம். பூனை இன விலங்குகளான புலி, சிறுத்தை போன்றவையும் அவற்றின் இரையான மானினங்களும் இப்பூங்காவின் விலங்கினங்களில் முக்கியமானவை. யானைகள், கரடிகளும் பிற சிறு விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. இங்குள்ள மரங்களில் 110 சிற்றினங்களும், பாலூட்டிகளில் 50 சிற்றினங்களும், பறவைகளில் 580 சிற்றினங்களும், ஊர்வனவற்றில் 25 சிற்றினங்களும் காணக்கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பூங்காவின் ஊடாக ராம்கங்கா ஆறு ஓடுகிறது. இதில் முதலைகளையும் காணமுடியும். ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் ஜூன் 15 வரை பூங்கா திறந்திருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றான வங்கப்புலியை காணலாம். யானை மீது அமர்ந்தவாறே வனவிலங்குகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பை முதலில் வழங்கியது இங்குதான்
எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்: கடந்த 1973ம் வருஷம் இதே ஏப்ரல் ஃப்ர்ஸ்ட் அன்னிக்குத்தான் நமது இந்திய அரசு, புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டத்தை இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கிச்சாக்கும்.