சேலம்: பதவியை தக்க வைக்க எடப்பாடியிடம் அண்ணாமலை சரணடைந்து உள்ளார். இதற்காக எடப்பாடி மகனிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய அண்ணாமலை, அவரை டெல்லிக்கு அழைத்து சென்று அமித்ஷாவிடம் ரகசிய டீலிங் நடத்தி உள்ளார். இதனால் அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் மலர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜவுடன் கூட்டணி சேருவதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பிறகு தேர்தலின்போது கூட்டணியை உடைத்து விட்டு தனி அணியாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். இந்த கூட்டணி முறிவுக்கு தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை தான் காரணம் என பாஜவினரும் அதிமுகவினரும் கூறி வந்தனர்.ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதுவுமே தெரியாது என தரம் தாழ்ந்து பேசிய காரணத்தால்தான் கூட்டணி உடைந்ததாகவும் அதிமுகவினர் கூறி வந்தனர். மேலும், அதிமுகவும் பாஜவும் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் தமிழ்நாட்டில் குறைந்தது 10 இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தோல்விக்கு அண்ணாமலையே காரணம் என பாஜ தமிழக தலைவர்கள் டெல்லி தலைமையிடம் கூறினர். இதனை அவர்கள் உண்மை என நம்பிய நிலையில் தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை தூக்கிவிட்டு வேறு ஒருவரை தலைவராக நியமித்துவிடலாம் என முடிவு செய்தது. இதையடுத்து, தலைவர் பதவியை பிடிக்க பாஜவில் கடும் போட்டி ஏற்பட்டது.
எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாஜி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பேராசிரியர் ராம.சீனிவாசன் உள்ளிட்டோர் களத்தில் குதித்தனர். அதே நேரத்தில் சமீபத்தில் நயினார் நாகேந்திரன், அதிமுகவுடன் அமர்ந்து பேசினால் கூட்டணி ஏற்பட்டு விடும் என தெரிவித்தார். இதன் மூலம் அவருக்கே தலைவர் பதவி கிடைக்கும் என உறுதியாக கூறப்பட்டது. இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜவும் -அதிமுகவும் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டதாக புதுத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாஜ தலைவர் அண்ணாமலை எல்லா வழிகளிலும் முயற்சி செய்தும் கூட டெல்லி தலைமை கண்டுகொள்ளவில்லை.
அவரை பதவியில் இருந்து தூக்குவதிலேயே குறியாக இருந்தது. தலைமையை தன்பக்கம் திருப்பும் வகையில் தனக்கு தானே சவுக்கால் அடித்தும், இனி செருப்பே அணியபோவதில்லை என்றும் சபதம் எடுத்தார். என்றாலும் கூட தலைமை அவரை மாற்றியே தீரும் என தகவல் வெளியானது. இந்நிலையில், சாட்சியின் காலில் விழுவதை விட சண்டைக்காரரின் காலில் விழுவதே மேல் என எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தையில் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது, சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் உச்ச பதவிக்கு வந்துவிட்டார். அவருடன் என்னை ஒப்பிட முடியாது. நமது சமுதாயத்தில் எடப்பாடியார் உயர்ந்த பதவியில் இருப்பதால் நமது சமுதாயத்திற்கே பெருமை ஏற்பட்டுள்ளது.
இடையில் நடந்த கசப்பான அனுபவத்தை மறந்துவிட்டு மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். வருமான வரித்துறை நடத்தும் சோதனைகளை எல்லாம் நிறுத்திவிடலாம் என அண்ணாமலை மிதுனிடம் பேசியதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இதையடுத்து மிதுனை 3 முறை டெல்லிக்கு அழைத்துச்சென்று அமித்ஷாவிடம் அண்ணாமலை பேச வைத்துள்ளார்.
இதில், ரகசிய உடன்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. என்னால் தான் அதிமுக கூட்டணி உடைந்தது. இனிமேல் அதிமுக நம்முடன் சேராது என அனைவரும் கூறிவரும் நிலையில் அவரது மகனையே நான் அழைத்து வந்துவிட்டேன் என டெல்லி மேலிடத்தில் அண்ணாமலை கூறியதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இனிமேல் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேச மாட்டேன் என டெல்லியிடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் அண்ணாமலை உறுதி கூறியதாகவும் தெரிகிறது.
3 மாதம் அவகாசம் கொடுக்குமாறும் தமிழகத்தில் நடிகர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமித்ஷாவிடம் மிதுன் கூறியதாக தெரிகிறது. இதனை அமித்ஷா சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டதாகவும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தலைவர் பதவி போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர். தற்போது, நயினார் நாகேந்திரன் மட்டுமே போட்டியில் இருக்கிறார். அவரும் இந்த விவகாரம் தெரிந்தபிறகு போட்டியில் இருந்து விலகி கொள்ளபோவதாக கூறப்படுகிறது. வரும் 31ம் தேதி அமித்ஷா சென்னை வருகிறார். அப்போது பாஜக தலைவராக அண்ணாமலையே தொடருவார் என அவர் அறிவிப்பார் என பாஜ வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மீண்டும் அண்ணாமலையே பாஜ தலைவராக அறிவிக்கப்படும் தகவலை தெரிந்து கொண்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடி மகன் மிதுனும் சந்தித்து பேசியது உண்மை தான். இதில், கூட்டணி சேருவது என்பதும் 90 சதவீதம் உறுதியாகிவிட்டது. மிதுனுடைய மிகவும் நெருங்கிய உறவினரான ஈரோட்டில் உள்ள வீட்டில் நடந்த ரெய்டுக்கு பின்னரே இந்த சந்திப்பு நடந்துள்ளது. அவர் எடப்பாடி பழனிசாமிக்கும் முக்கிய நபராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள நிலையில் விரைவில் பாஜவும் அதிமுகவும் கூட்டு சேரும். தலைவர் பதவியில் இருந்து தூக்கப்படுவார் என கூறப்பட்ட அண்ணாமலை இதன் மூலம் பதவியை காப்பாற்றிக்கொண்டார்’ என்றனர்.
