chennireporters.com

நீட் தேர்வு ரத்து தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டியின் விசாரணைக்கு தடை விதிக்ககோரி பா.ஜ.க வழக்கு

நீதிபதி A.k.ராஜன்.

நீட் தேர்வின் விளைவுகள் குறித்து கண்டறிய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர்

கரு. நாகராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் இதுதொடர்பாக, அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கரு.நாகராஜன். பா.ஜ.க

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு சேர்க்கைகாக நடத்தப்படும் தேசிய அளவிலான நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து ஜூன் 10ம் தேதி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது.மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

அதை மீறும் வகையில் தற்போது தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது அனுமதிக்க
தக்கதல்ல.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலன் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது.

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர அரசு பள்ளியில் படித்த, நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆகவே நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக, ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான கமிட்டி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

அதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!