23 ஆண்டுகளுக்குப் பின் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மறைந்த தோழர் மோகனுக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்கள். பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அசீப் இந்த வெற்றியை தோழர் மோகனுக்கு காணிக்கையாக்குகிறோம் என்று தெரிவித்தார்.
மறைந்த எம்.யூ.ஜே. மோகன் உள்ளிட்ட சிலர் தேர்தல் நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் முதலில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

சங்க தேர்தல் நடத்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகத்திலிருந்தவர்கள் தனக்குப் போதுமான ஒத்துழைப்பை வழங்க மறுக்கிறார்கள் எனக்கூறி அந்தப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் நீதிபதி சந்துரு . எனவே மீண்டும் தேர்தல் நடத்தக்கோரிய பல குரல்கள் ஒலிக்க தொடங்கியது.
அதன் அடிப்படையில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் நீண்ட காலமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வந்தது. அதன் பின்னர் தேர்தல் நடத்தக்கூடாது என்று வழக்கு தொடுத்த சுப்பையா மற்றும் விஸ்வநாத் ஆகியோரை அழைத்து சமாதானம் பேசிய வழக்கை வாபஸ் பெற செய்தனர்.
பின்னர் தேர்தல் நடத்தாமல் திருட்டுத்தனங்களை செய்து வந்த திருட்டு கும்பலிடம் இருந்து சங்கத்தை மீட்க ஒரு வழிகாட்டுதல் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
’தி இந்து’ என்,ராம், ‘நக்கீரன்’ கோபால் உள்ளிட்டோர் அடங்கிய இந்த வழிகாட்டுதல் குழு தேர்தல் நடப்பதற்குத் தேவையான வேலைகளை செய்து வந்தனர்.
தொடர்ந்து உறுப்பினர் பட்டியல் சரி செய்யப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமிக்கப்பட்டார்.
தேர்தலில் மாற்றத்துக்கான அணி, நீதிக்கான கூட்டணி, ஒற்றுமை அணி, என மூன்று அணிகள் போட்டியிட்டன. இந்த அணிகள் தவிர சிலர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் களம் இறங்கினர். இவர்களில் மாற்றத்துக்கான அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் தேர்தலுக்கு முன்பே போட்டியிலிருந்து விலகி விட்டார்.
தலைவர் பதவிக்கு வி.எம்.சுப்பையா, சுரேஷ் வேதநாயகம், ஆர்.கே.ராதாகிருஷ்ணன் மூவரும் அணிகள் சார்பிலும் சுயேட்சையாக சிலரும் போட்டியிட்டனர்.
தலைவர், செயலாளர், பொருளாளர் தவிர இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு இணைச் செயலாளர், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என மொத்தம் 11 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய வாக்குபதிவு மாலை ஐந்து மணி வரை நடந்தது. மொத்த வாக்காளர்களான 1502 பேரில் 1371 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலையே எண்ணப்பட்டன.
முதலில் இணைச் செயலாளர் பதவிக்கான ரிசல்ட் தெரிய வந்தது. நீதிக்கான அணி சார்பாக இப்பதவிக்குப் போட்டியிட்ட நெல்சன் சேவியர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரிசையாக ஒவ்வொரு பதவிக்கான முடிவும் அறிவிக்கப்பட்டதில், ஒரேயொரு நிர்வாகக் குழு உறுப்பினர் இடத்துக்கு மட்டும் ஒற்றுமை அணியின் சார்பில் நின்ற கவாஸ்கர் தேர்வாக, மற்ற அனைத்து பதவிகளையும் நீதிக்கான கூட்டணியே கைப்பற்றியது. தலைவராக சுரேஷ் வேதநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நீதிக்கான கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரம்.
🔹தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் வெற்றி பெற்றார். சுரேஷ் பெற்ற வாக்குகள் 659.
🔹பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அஃசீப் முகமது வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 734.
🔹இணைச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட நெல்சன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 697.
🔹பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட மணிகண்டன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 803.
🔹துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட சுந்தர பாரதி வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 516.
🔹துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட மதன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 599.
🔹நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட்ட
🔹ஸ்டாலின் அவர் பெற்ற வாக்குகள் 584,
🔹பழனி அவர் பெற்ற வாக்குகள் 634,
🔹கவாஸ்கர் (ஒற்றுமை அணி) அவர் பெற்ற வாக்குகள் 596,
🔹விஜய் கோபால் அவர் பெற்ற வாக்குகள் 602,
🔹அகிலா அவர் பெற்ற வாக்குகள் 509. ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரன் நடிகர் யோகி பாபு மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் விமலேஸ்வரன் தலைமையிலான அணியினர் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அது தவிர தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களில் உள்ள பத்திரிகையாளர் மன்றங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோடங்கி என்கிற ஆபரகாம் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சென்னை ரிப்போர்ட்டஸ் காம் இணையதளத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.