கல்லூரி ஃபீஸ் கட்ட பணமில்லாமல் செக்யூரிட்டி வேலை செய்த டேவிட் சின்னப்பராஜ்! இன்று சாப்ட்வேர் நிறுவன முதலாளி சுயமாக ஒரு தொழிலை தொடங்கி அதனை வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது என்பது அத்தனை எளிதான காரியம் கிடையாது. ஹார்ட் வொர்க்கோடு சேர்த்து ஸ்மார்ட் வொர்க்கும் அதற்கு அவசியம். இந்தியாவில் தற்போது பல்வேறு இளைஞர்களும் தங்களுடைய சொந்த முயற்சியில் சுயதொழில் ஆரம்பித்து வெற்றி பெறுகின்றனர். அப்படி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரின் வெற்றி கதையை தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

அன்டோசா டெக்னாலஜி Antosa Technology பல்வேறு சிறு தொழில்களும் தங்களுடைய தொழில்களை நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு உதவி வரக்கூடிய ஒரு சாப்ட்வேர் நிறுவனம் ஆகும். பல்வேறு தொழில்களுக்கு தேவையான ஈ காமர்ஸ் தளங்களை உருவாக்கி தருவது, வெப்சைட் மேம்படுத்தி தருவது மற்றும் மொபைல் செயலிகளை உருவாக்கி தருவது என இந்த நவீன காலத்தில் ஒரு தொழில் தன்னை தக்கவைத்துக் கொள்ள தேவையான அனைத்து விதமான டிஜிட்டல் தீர்வுகளையும் வழங்குகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு சகோதரர்களால் ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்டது தான் அண்டோசா டெக்னாலஜி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது 20க்குன் அதிகமான தொழில் துறைகளில் 5க்கும் அதிகமான நாடுகளில் வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது . 100க்கும் அதிகமான ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்து இருக்கிறது. இந்தியா மட்டும் இல்லாமல் மலேசியா,ஆஸ்திரேலியா ,அமெரிக்கா ,டான்சானியா ஆகிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தொழில்களுக்கும் நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் ரீதியிலான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு தொடக்கமாக இருந்து ஒரு 300 ரூபாய் தான் என்பது தான் நம்மை ஆச்சரியப்படுத்தும். டேவிட் சின்னப்ப ராஜ் அன்டோசா டெக்னாலஜி நிறுவனத்தின் துணை நிறுவனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக சென்னைக்கு வருகை தந்திருந்தார். அப்போது கல்லூரி கல்வி கட்டணம் செலுத்த வேண்டும், வீட்டு வாடகை வழங்க வேண்டும் என பல்வேறு நிதி ரீதியான சவால்களை இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
எனவே பகலில் கல்லூரிக்கு சென்று விட்டு மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் உணவகத்தில் வேலை செய்வாராம் இது தவிர இரவு நேரங்களில் பாதுகாவலராகவும் வேலை செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ஒரு நாள் பேஸ்புக்கில் லோகோ டிசைன் செய்வதற்கு ஆள் தேவைப்படுகிறது என்று விளம்பரத்தை பார்த்திருக்கிறார். அந்த சமயத்தில் இவரிடம் லேப்டாப் கூட கிடையாது ஸ்மார்ட் போனிலேயே ஒரு லோகோவை உருவாக்கி அந்த நபருக்கு வழங்கியிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு முதன் முதலில் 300 ரூபாய் சம்பளமாக கிடைத்ததாம். அதுவே மிகப்பெரிய அளவில் நம்பிக்கை அளித்தது எனக் கூறியிருக்கும் அவர் அந்த ஒரு சிறிய தொடக்கம் தான் இன்று பெரிய நிறுவனத்திற்கு காரணமாக அமைந்தது எனக் கூறியிருக்கிறார்.
ஃப்ரீலேன்சராக வேலையை தொடங்கிய அவர், கல்லூரி நாட்களிலேயே 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இவ்வாறு லோகோ வடிவமைப்பிலேயே சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார். இவருடைய இந்த வளர்ச்சியை கண்டு அவருடைய மூத்த சகோதரரும் ஃப்ரீ லான்சிங் முறையில் இணையதளங்களை வடிவமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு தந்து இருக்கிறார். ஒருநாள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போதுதான் ஏன் நாம் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கக்கூடாது என யோசனை வந்ததாம்.
