எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், பேரோடும் புகழோடும் திகழ்ந்தாலும், மனதில் சாதீய வன்மம் இருந்தால் அவமானப்பட்டே தீரவேண்டும்..
இதற்கு அண்மைக்கால உதாரணம் பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் நடந்தது என்ன..?

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
சமீபத்தில் திரைப்படம் தொடர்பான கருத்தரங்கொன்றில் பிரபல இயக்குநர் ‘அடூர்’ கோபாலகிருஷ்ணன் பேசும்போது, ” ‘தலித்’துகளுக்குப் படம் இயக்குவதற்கு ‘கேரளா ஃபிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்’ ஒன்றரைக் கோடி ரூபாய் வழங்குவதைக் குறிப்பிட்டு, அப்படி ஒருவருக்கே பணத்தைக் கொடுக்காமல் மூவருக்கு ஐம்பது லட்சங்களாகப் பிரித்துக் கொடுக்க வேண்டுமென்றும், அப்படிக் கொடுக்கப்படும் போது அவர்கள் குறைந்தது மூன்று மாதங்கள் முழுமையான திரைப்படப் பயிற்சிக்கு முழுமையாகத் தயாரானதற்குப் பின்னரே அந்தப் பணம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதைப் போலவே பெண்களுக்கும் எந்தப் பயிற்சியும் இல்லாமல் படம் இயக்குவதற்காக நேரடியாகப் பணம் கொடுக்கக் கூடாது என்று சொன்ன அந்தத் தருணத்தில் ஒரு பெண் எழுந்து ‘அடூர்’ கோபாலகிருஷ்ணனின் பேச்சிற்கெதிரான வாதங்களை முன்வைத்தார். சுதந்திரம் வாங்கி 78 வது ஆண்டைக் கொண்டாட சில நாட்களே மிச்சமிருக்கும் இந்தச் சூழலிலும் ‘தலித்’ களின் நலனுக்காக உருவாக்கப்படும் திட்டங்களிலும் தங்கள் சாதித்திமிரைக் காட்டுவதாக ‘அடூரின்’ பேச்சிருப்பதை அவர் எடுத்துச் சொன்னது அவையில் மிகப்பெரிய அதிர்வையும், அவைக்கு வெளியே அவருக்கு மிகப் பெரிய ஆதரவையும் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் கேரளத்தில் இது குறித்த பெரிய விவாதத்தையும் இந்நிகழ்வு ஏற்படுத்தி இருக்கிறது.

புஷ்பவதி
அதோடு முடிந்து விட்டிருந்தால் கூட பெரிய சிக்கலின்றிப் போயிருக்கும். ‘அடூர்’ நேர்முகமொன்றில், “ஹூ இஸ் ஷீ? வழிப்போக்கர்களெல்லாம் வந்து போவதற்கு ‘ஃபில்ம் கான்க்ளேவ்’ என்ன சந்தையா?” என்று கேள்வி எழுப்ப, ‘தான் அடித்த ஆப்பில் தானே தேடிச் சென்று அமர்ந்த மந்தி’ யின் கதை போலாகி விட்டது உலகப் புகழ் பெற்ற இயக்குநரின் நிலை. ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற குறளைப் படிக்காமல் போனதன் விளைவு.
இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும் அடூர் கோபாலகிருஷ்ணனைப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றன. கேள்வி எழுப்பிய பெண்மணி ‘அடூரு’க்கு வேண்டுமானால் தெரியாதவராக இருக்கலாம். ஆனால் அவரும் திரைத்துறையைச் சார்ந்தவர்தான் என்று அவரைப் பற்றிய அறிமுகப் பாடத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.

‘அடூர்’ நினைப்பது போல கலையுலகில் வழிப்போக்கரல்ல அந்தப் பெண்மணி. அவரது பெயர் புஷ்பவதி பொய்ப்பாடத்து. ‘கேரள சங்கீத நாடக அகாடமி’யில் துணைத்த்கலைவராக இருக்கும் தலித் பெண்மணி. ‘ ‘கான பூஷணம்’ ‘கான ப்ரவீணா’ என்ற இரண்டு சங்கீதம் தொடர்பான படிப்பிலும் முதல் ரேங்’கில் தேர்ச்சி பெற்றிருந்தும் கூட எந்த அரசாங்கப் பணிக்கும் தேர்ந்தெடுக்கப்படாமல் போனதற்கு அவர் ‘தலித்’தாக இருப்பதே காரணமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.

வெற்றி பெற்ற திரைப்படமான ‘சால்ட் அண்ட் பெப்பரில்’ இடம் பிடித்த ‘செம்பாவு பூநெல்லின் சோறோ’ என்ற பாடலை ஒட்டு மொத்தக் கேரளமும் பாடி மகிழ்ந்தும் கூட வேறு புதிய வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கும் அவரது சாதியே காரணமாகச் சொல்லப்படுகிறது.
எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியின் கொடூர அடையாளம் கலைத்துறையிலும் நிறைந்து இருப்பதை அடையாளம் கண்டு கொண்ட பெண்மணியான புஷ்பவதி பொய்ப்பாடத்து, அதனால் கலங்கி நின்று தேங்கி விடவில்லை. தனக்கு நேர்ந்த அத்தனைத் தடைகளையும், தானே எழுதி, இசையமைத்து பாடிய பாடல்களின் மூலமாகத் தகர்த்து வெளிவந்து தன்னை ஒரு இசைக் கலைஞராக நிலைநாட்டினார் அவர்.

கர்நாடக சங்கீதம் முறையாகக் கற்றறிந்திருந்தும் கூட அதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்பட்டு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதற்குத் தள்ளப்பட்டபோதும் அவரது போர்க்குணம், அவர் பாடிய ‘ஆசாதி’ பாடலிலும், ‘எத்ர எத்ர மதிலுகள் தகர்த்தெறிஞ்ச கேரளம்’ என்ற புரட்சிகரமான பாடலிலும் வெளிப்பட்டு இன்றும் புஷ்பவதியின் திறமைக்கு சாட்சி வகிக்கின்றன.
தனக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை தனக்குச் சாதகமாக மாற்றும் மனவலிமை அவருக்கிருந்ததனாலேயே ஸ்ரீநாராயணகுரு மற்றும் பொய்கையில் அப்பச்சன் ஆகியோரின் படைப்புகளுக்கு இசையமைத்து தன்னை அடையாளப்படுத்த முடிந்தது அவரால். திரைப்படத்தை ஒரு தொழிலாகக் கருதியவர்கள் எவரும் தனக்கெதிராகக் குரல் எழுப்பவில்லை என்று சொன்ன அடூருக்கு, புஷ்பவதி திரைப்படத் துறையில் பின்னணிப் பாடகி என்பது புரியாமல் போனதில் விந்தையில்லை. தந்த கோபுரத்தில் அமர்ந்திருப்பவனுக்கு சாமானியர்களை எப்படித் தெரிய வரும்?

” ‘அடூர்’ சொன்னதில் என்ன தவறு?” என்ற கேள்வியோடு வழக்கம் போல வந்து நிற்கிறார்கள் ‘அரிய வகை ஏழைகள்’. “பணத்தைப் பிரித்துக் கொடுப்பது என்பதில் அல்ல சிக்கல். ‘மண்டல் கமிஷன்’ தனது அறிக்கையில், “கல்வியில் மட்டுமின்றி வேலை வாய்ப்புகளிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” என்று சொன்னபோது, “கல்வியில் சரி. எதற்கு வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்?” என்று, அன்று ஆவேசத்தோடு தீக்குளிப்புப் போராட்டம் நடத்தியது போன்ற மனநிலைதான் இப்போது ‘அடூர்’ கோபாலகிருஷ்ணன் பேசியிருக்கும் இந்தப் பேச்சும்” என்று கேரளத்தின் அறிவார்ந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

“வெகு நியாயமாகப் பேசுவது போல் தோன்றினாலும் ‘அடூரின்’ இந்தப் பேச்சிற்குப் பின்னால் இருக்கும் அரசியல் மிகுந்த ஆபத்து நிறைந்தது.
மூன்று மாத காலங்கள் கடுமையான பயிற்சி என்பது ‘எப்படியும் எங்களிடம் நீங்கள் வந்து நிற்க வேண்டும். உங்களுக்கு இயக்குவதற்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை நாங்கள் முடிவு செய்வோம் அல்லது எங்களைப் போன்ற சிலர் முடிவு செய்வார்கள் நேரடியாகவே படம் இயக்குவதற்கு உண்டான தகுதி தலித்களான உங்களுக்கு இல்லை என்பதுதானே அதன் உண்மைப் பொருள்?” என்று கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பும், அறிவும், கலையும் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் உயர்ந்தவனாகி விட முடியாது. மாறாக தான் வாழும் சமூகத்தில் வாழ்கின்ற எல்லா மனிதர்களையும் தனக்கு இணையாக உயர்த்த முனைவது அல்லது தனது தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்வது மட்டும்தான் நல்ல மனிதனுக்கு அடையாளமாக இருக்க முடியும்.
சிறந்த கலைப்படைப்புகளைத் தந்திருக்கும் ‘அடூர்’ கோபால கிருஷ்ணனின் மூளையிலும் கூட சாதி வெறி என்ற அழுக்குச் சாணிதான் அடைந்து கிடக்கிறது என்பது இந்த ஒற்றைப் பேச்சில் தெளிவாகத் தெரிவதாக மலையாளிகள் குமுறுகிறார்கள். “யார் இவள்?” என்று தன் அதிகாரத் திமிராலும், மேட்டிமைத்தனத்தாலும் கேள்வி எழுப்பிய ‘அடூரை’, “யார்ரா இவன்?” என்று ஒட்டு மொத்தக் கேரள சமூகமும் திருப்பிக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஏனோ வேடனின் பாடலொன்று ஓங்காரமாக ஒலிக்கிறது.
“ஞான் பாணனல்ல பறயனல்ல புலயனல்ல.. தான் தம்புரானும் அல்ல. ஆனெங்கில் எனிக்கொரு மயிரும் இல்ல”
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் எல்லாத் துறைகளிலும் சாதி நீர் பூத்த நெறுப்பாக இருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது அடூர் கோபாலகிருஷ்ணனின் இந்த பேச்சு என்கிறார்கள் தலித் சிந்தனையாளர்கள்.
