நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இப்படி பொய் பேசலாமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஓராண்டு கடந்தும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்சி மெர்லின் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் 2007ஆம் ஆண்டு உடற்பயிற்சி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அங்கீகரிக்கப்பட்ட என் பணி நியமனத்திற்கு ஒப்புதல் கேட்டு கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு கல்லூரி நிர்வாகம் 2008ஆம் ஆண்டு கடிதம் அனுப்பியிருந்தது.இதுகுறித்து பல முறை கடிதம் அனுப்பிய நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு எனது பணிநியமனத்திற்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் ஒப்புதல் அளித்தார். எனினும் 2007ஆம் ஆண்டு முதல் எனக்கு ஊதியம் உள்ளிட்ட பணபலன்களை வழங்கவில்லை.
கோபால் ஐஏஎஸ்
இதுகுறித்து இணை இயக்குநருக்கு மனு அளிக்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர் இந்த பணி நியமனத்திற்கு உயர் கல்வித் துறை செயலாளரிடம் மேலும் ஒரு ஒப்புதல் பெற வேண்டும் என 2022 ஆம் ஆண்டு உத்தரவை பிறப்பித்திருந்தார். இதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து இணை இயக்குநரின் உத்தரவை ரத்து செய்தது.அத்துடன் 2007ஆம் ஆண்டு முதல் ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களையும் கணக்கிட்டு, 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே இந்த உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மெர்லின் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரி கோபால் நேரில் ஆஜரானார்.
நீதிபதி இளந்திரையன்
அவரிடம் நீதிபதி, இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டு ஆகிறது. அவமதிப்பு வழக்கும் 4 முறை விசாரணைக்கு வந்தது. ஆயினும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லையே! நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் ஐஏஎஸ் அதிகாரி எதற்காக ஆஜராக வேண்டும்? இதை அமல்படுத்த தேவையில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது அரசு வழக்கறிஞர் தரப்பு கூறுகையில், தற்போது உயர்கல்வித் துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் இல்லை. வேறு அதிகாரிதான் உள்ளார் என்றார். அதற்கு மெர்லின் தரப்பு, வழக்கு தொடரும் போது கோபால்தான் செயலாளராக இருந்தார் என்றார்.
அதை கேட்ட நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரியே பொய் சொல்லலாமா? வழக்குத் தொடரும் போதும் செயலாளர் பதவியில் இருந்துள்ளீர்கள், ஓராண்டு கடந்தும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்துள்ளீர்கள். எனவே இந்த அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப் போவதாக நீதிபதி எச்சரித்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரரின் ஊதியத்தை கணக்கிட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. எனவே ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம். அடுத்த விசாரணை நடக்கும் போது உரிய பதில் தெரிவிப்போம் என தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கு வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.