chennireporters.com

கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கவனமாக செயல்பட வேண்டும். திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேண்டுகோள்.

திமுகவின் 15வது பொதுக்குழு  சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று திமுகவின் கட்சித்தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போது கட்சியினரிடையே பேசிய ஸ்டாலின் நிர்வாகிகள், தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று  பேசினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளையும் நியமிக்க வேண்டும். அந்த வகையில் தற்போது தி.மு.க.வில் 15-வது முறையாக உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.

முதற்கட்டமாக பேரூராட்சி, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரம் வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 7 பேர் புதியவர்கள் ஆவார்கள். தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் தேர்தல் முடிவு இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்குழுவில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி.யும் மீண்டும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

மேலும், தி.மு.க. துணை பொதுச்செயலாளர்களாக 4 பேர் இருந்தனர். அதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டார். எனவே, அந்த இடத்துக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழு இன்று நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்களும், ஆயிரத்து 500 சிறப்பு அழைப்பாளர்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 100 பேர் பங்கேற்று உள்ளனர்.

இந்த நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. தொடங்கப்பட்டபோது பேரறிஞர் அண்ணா தலைவராக இருந்தார். அவர் மறைவுக்கு பிறகு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி, முதல்முறையாக தி.மு.க. தலைவராக கருணாநிதி பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து 11 முறை இந்த பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாநிதி மறைவுக்கு பிறகு 2016-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் ஆனார். தற்போது அவர் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல்முறையாக தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். தற்போது 2-வது முறையாக அவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும்போது முதல்-அமைச்சராக உள்ளார். அதாவது முதல்-அமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தி.மு.க. தலைவராவது முதல்முறை ஆகும். 11-வது முறையாக தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தபோது, அவர் உடல் நலம் இல்லாமல் இருந்தார். அப்போது கட்சியின் செயல் தலைவர் பதவியையும் மு.க.ஸ்டாலின் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!