chennireporters.com

கைது பயத்தில் பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி.கே.வி. சீனிவாசன்.  

தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலங்களை பதிவு செய்த பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி. கே.வி. சீனிவாசன் விரைவில் கைது செய்யப்படுவார் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலங்களை பதிவு செய்த பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி.  சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  நாடு முழுவதும் நிலங்களை வைத்து மோசடி செய்த பிஏசிஎல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  சென்னை அண்ணாநகரை சேர்ந்த வரதராஜ் என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.  அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் பத்திரப்பதிவு செய்துள்ளதாக புகார் அளித்திருந்தார்.

குறிப்பாக பத்திரப்பதிவு துறையின் கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிஏசிஎல் என்ற நிறுவனம் நாடு முழுவதும் 6 கோடி முதலீட்டாளர்களுக்கு நிலம் கொடுப்பதாக 49,000 கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடை பெற்றது.

அப்போது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து இந்த நிறுவனம் மோசடி செய்து வைத்திருக்கும் நிலங்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த உத்தரவு பிறப்பித்தது . அதன் அடிப்படையில் இந்த நிறுவனம் தொடர்பான நிலங்களை வேறு யாருக்கும் விற்பனை செய்ய கூடாது என தடை விதித்திருந்தது.

நாடு முழுவதும் இந்த நிறுவனம் தொடர்பான நிலங்களை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என லோதா கமிட்டியிலிருந்து கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு கடந்த மே மாதம் 2018 ஆம் ஆண்டு தமிழக தலைமை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.  ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவையும் கமிட்டியின் உத்தரவையும் மீறி தமிழகத்தில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கடிதம் அனுப்பப்பட்ட பிறகும் மதுரையை சேர்ந்த சார்பதிவாளர் பிஏசிஎல்  நிறுவனத்திற்கு சாதகமாக 2013 ஆம் ஆண்டு விண்ணப்பித்ததின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்துள்ளது குறிப்பாக புரோக்கர் ரவிச்சந்திரன் என்பவர் கூடுதல் ஐஜி சீனிவாசனுடன்  கூட்டு சேர்ந்து பிஎசிஎல் நிலங்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் 2019 ஆம் ஆண்டு பிஏசிஎல் நிறுவனத்திற்கு தொடர்பான நிலங்களை விற்க சட்டவிரோதமாக சான்று கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது இதை பயன்படுத்திதான் பிஏசிஎல் தொடர்பான நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது .

தமிழகத்தில் மட்டும் இந்த நிறுவனத்திற்கு 8,198 சொத்து ஆவணங்கள் வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது . இதில் 33 சொத்து ஆவணங்கள் திருநெல்வேலி ,விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் 609 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன் பத்திரப்பதிவு செய்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரன் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

2019ம் ஆண்டு பத்திரப்பதிவு ஐஜியாக இருந்த குமரகுரு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகு அந்த பொறுப்பை கூடுதல் ஐ.ஜி சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.  அதன் பிறகு பதவியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் புரோக்கர்களாக பத்மநாபன் ரவிச்சந்திரன், ராஜ்குமார் ஆகியோர்களுடன் கூட்டு சேர்ந்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தது தெரியவந்துள்ளது . மேலும் வணிகவரித்துறை அதிகாரி சிவக்குமார் முன்னாள் அமைச்சர் ரோடு இணைந்து மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.  மேலும் பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிலங்களை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் முன்னாள் பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக சென்னை சாந்தோமில் உள்ள கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன் அலுவலகத்தில் தரகர்கள் சர்வ சாதாரணமாக இந்த மோசடி விவகாரத்தில் வந்து பேரம் பேசியதும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.  அரசு உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தரகர்கள் வந்து சென்றதற்கான போட்டோக்கள் சிசிடிவி ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பிஏசிஎல் நிறுவனம் 300 கோடிக்கு மேல் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்திருப்பது  விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன்   P.A.C.L. நிறுவனத்தின் நிலங்களை சட்டவிரோதமாக பதிவு செய்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உரிய ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் கூடுதல் ஐ.ஜி. சீனிவாசனை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கூடுதல் ஐ.ஜி.சீனிவாசனை கைது செய்து விசாரித்தால் முன்னாள் அமைச்சர்கள் பத்திரப்பதிவு அதிகாரிகள் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லுகிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.

தமிழகம் முழுவதும் சென்னையை ஒட்டி உள்ள ஆவடி, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு,தாம்பரம் ,திருவள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலர்களின் சொத்து மட்டும் பல கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள் தகவல் அறிந்த அதிகாரிகள். அவர்களின் சொத்துக்களை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் அறப்போர் இயக்கத்தினர்.

இதையும் படிங்க.!