பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளது காங்கிரஸ்- பிரதமர் மோடிக்கு கார்கே பதில்.
அகமதாபாத், நவ. 28: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் காங்கிரஸ் கட்சி இரு பிரதமர்களை இழந்துள்ளது என்று அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தின் கேடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி கண்ணோட்டத்தில் பயங்கரவாதத்தைப் பார்க்கிறது. பயங்கரவாதமும் முடிவுக்கு வரவில்லை; காங்கிரஸின் அரசியலும் மாறவில்லை என்று விமர்சித்தார்.
மோடியின் விமர்சனத்துக்கு பதிலளித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகமதாபாதில் செய்தியாளர்களிடம் திங்கள் கிழமை கூறியது:
பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் பாடுபட்டோம். நாட்டில் அமைதி நிலவச் செய்வதற்காக நாங்கள் எங்கள் தலைவர்களை இழந்துள்ளோம். நாட். டை ஒற்றுமையாக வைத்திருப்பதற்காக: ‘இந்திரா காந்தி தனது உயிரைத் தியாகம் செய்தார். அதே போல நாட்டின் ஒற்றுமைக்காக ராஜீவ் காந்தி உயிர்த் தியாகம் செய்தார்.
இப்போது. குஜராத்தில் நடைபெறுவது சட்டப்பேரவைத் தேர்தல்தானே தவிர நாடாளுமன்றத் தேர்தல் அல்ல். மாநிலத்தை பாதிக்கும் பிரச்னைகளை நாங்கள் எழுப்புகிறோம். இந்த நிலத்தின் வெற்றிகள் குறித்தும் தோல்விகள் குறித்தும் மோடி பேசுவது நல்லது.
குஜராத் மாதிரி வளர்ச்சி என்று பாஜகவினர் பேசுகின்றனர். மாநில அரசுத் துறைகளில் 5 லட்சம் பணிக் காலியிடங்கள் உள்ளன. அவற்றில் 28000 காலியிடங்கள் ஆசிரியர் பணிக்கானவை. மாநிலத்தின் கடன் அதிகரித்துள்ளது.
இங்கு நாங்கள் ஆட்சியை இழந்தபோது ரூ.10,000 கோடி கடனை வைத்திருந்தோம். தற்போது அது ரூ. 3.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் கடன் ரூ.4.60 லட்சம் கோடியாக உயர உள்ளது.
பாஜகவினர் ஆறு அண்டுகளில் மூன்று முதல்வர்களை மாற்றிவிட்டனர். நீங்கள் மூன்று முதல்வர்களை மாற்றினால் நீங்கள் எதையும் செய்யவில்லை என்று அர்த்தம். இல்லாவிட்டால் அவர்களை மாற்றுவதற்கான காரணம் ஏதுமில்லை. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார்.