chennireporters.com

பொது மக்களுக்கு “நாமம்” போலீசுக்கு “கப்பம்” அடாவடி ஆவடி தாசில்தார்.

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்குவதாக கூறி 68 லட்ச ரூபாய் பணம் வாங்கிய வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.  இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

திருவெற்றியூர், அண்ணா நகர் குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.  அந்த புகாரில் பொன்னேரி தாசில்தாராக  இருந்த மணிகண்டன் 325 நபர்களுக்கு நத்தம் புறம்போக்கு இடத்தையும் அந்த இடத்திற்கு பட்டாவும் வழங்குவதாக 68 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை ரொக்கமாக நான் கொடுத்திருந்தேன்.

தாசில்தார் மணிகண்டன்

அந்த பணத்தைப்பெற்றுக் கொண்ட  தாசில்தார் மணிகண்டன்  நிலமோ பட்டாவோ வழங்காமல் பணி மாறுதலாகி ஆவடி சென்றுவிட்டார்.  அவரை நேரில் சந்தித்து பலமுறை கேட்டும் பணம் தரவில்லை. எங்களை அசிங்கமாக பேசி மிரட்டுகிறார்.  ஒருமுறை 15 லட்சம் மட்டும் பணம் கொடுத்தார்.

மீதி பணத்தை தராமல்  இழுத்தடிக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார் . அந்த புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் எண்ணூர் காவல் உதவி ஆணையர் பிரம்மானந்தன் விசாரித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஒரு மாதமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் ஏ.சி பிரமானந்தன் எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையரை சந்தித்த மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் குறித்தும் தாங்கள் எப்படி வழக்கை ஒத்தி போடலாம் என்பது குறித்தும் விவரித்து விட்டு வந்தார்களாம்.  அதன் அடிப்படையில் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து வந்த மனுவை வாங்கி வைத்துக் கொண்ட பிரம்மானந்தன் தன் கடமையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு  செய்யாமல் பலம் வாய்ந்த மணிகண்டன் பக்கம் சாய்ந்து விட்டாராம்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள்  திருவள்ளூர் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். அது தவிர மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.

தலைமைச் செயலாளர் மற்றும்  வருவாய் துறை செயலாளர்களுக்கு புகார் அளிக்க முடிவு செய்து இருக்கிறார்கள் . மணிகண்டன் பணியாற்றிய பல இடங்களில் இது போன்ற பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் சில பகுதிகளில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள் அவருடன் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள்.

இதையும் படிங்க.!