chennireporters.com

நாசரின் அடாவடித்தனம் தான் அமைச்சர் பதவி பறிப்புக்கு காரணமா?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  நாசர் மீது அடுக்கடுக்கான  புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனுப்பபட்டு வந்தது. கடுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் நாசரை அழைத்து விசாரித்த்தாக கூறப்படுகிறது. அதில் நாசர் சரியான விளக்கம் அளிக்காததால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஸ்டாலின் முடிவு செய்ததாக சொல்லுகிறார்கள் உடன் பிறப்புக்கள்.

தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு முதலமைச்சராக முதல் முறையாக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றார். இதனிடையே ஆட்சிக்கு வந்த 10 மாதங்களிலேயே முதல் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. சாதியை சொல்லி அவமானப்படுத்தியதாக எழுந்த புகாரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கரின் பதவி ராஜகண்ணப்பணுக்கும், அவரின் பதவி எஸ்.எஸ். சிவசங்கருக்கும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 3வது முறையாக தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மன்னார்குடி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி ராஜா அமைச்சராக மே 11 ஆம் தேதி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜனை, சா.மு.நாசர் 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முதல் 2 தேர்தல்களிலும் ஆவடி தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், அந்த ராசியில் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்ற சா.மு.நாசர் பால்வளத்துறைஅமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவ்வப்போது அவர் மீது துறை சார்ந்த குற்றச்சாட்டுகள் எழுந்தது. இவரின் மகன் ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்ட ஆவடி மாநகர செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், மாநகராட்சி பணிகளுக்கான ஒப்பந்த விவகாரத்தில் அவரது தலையீடு அதிகமாக இருந்ததால் தலைமைக்கு புகார் சென்றது. இதனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஆசிம் ராஜா பதவி பறிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக திருவள்ளூர் அருகே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்றார் அமைச்சர் சா.மு.நாசர். அப்போது கட்சி தொண்டர்கள் நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால் கல்லை எடுத்து எறிந்த வீடியோ வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெற்றது.

இதனால் பலரும் அரசை குறை கூறினர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அமைச்சர்கள் உட்பட திமுக நிர்வாகிகளை கவனமுடன் செயல்பட வேண்டும் என கண்டித்தார்.

அமைச்சர் நாசர் ஏற்கனவே ஆவடி நகர மன்ற தலைவராக இருந்த போதும் காஞ்சிபுரம் மாவட்ட பால் கூட்டுறவு சங்க தலைவராக பதவி வகித்த போதும்  கட்சிக்காரர்களையும் பத்திரிகையாளர்களையும் அரவணைத்து போக மாட்டார். அது தவிர பத்திரிகையாளர்களையும், கட்சிக்காரர்களையும் மிகக் கேவலமாக மரியாதை குறைவாக கேவலமான வார்த்தைகளால் பேசும் பழக்கமுடையவர்.

பத்திரிகையாளர்களை நாகரிகமான முறையில் நடத்த மாட்டார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத ஒரு ஆளைத்தான் ஸ்டாலின் அமைச்சராக நியமித்தார் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தார்கள் ஆவடி தொகுதி வாக்காளர்கள். தான் எம்எல்ஏவாக வெற்றி பெற்று அமைச்சரான உடன் இதுவரை தொகுதி மக்களுக்கு நன்றி கூட சொல்லவில்லை என்கிற குற்றச்சாட்டு நாசர் மீது வைக்கப்பட்டுள்ளது. 

திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிக்காரர்களை அரவணைத்து போகாதது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. நாசர் அரசியலுக்கு வந்த  சமகாலத்தில் ஆவடி அரசியல் களத்தமில் இருக்கும் அந்திரி தாஸ் என்கிற மதிமுக பிரமுகரை நாசர் பலமுறை அவமதித்ததாகவும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அவருக்கு கவுன்சிலர் சீட்டு வழங்காமல் ஏமாற்றியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அது தவிர ஆவடி மாநகராட்சியில் துணை மேயரான சூரிய குமாருக்கு நிர்வாக சார்பில் அவரை புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் இடத்தில் மதிமுகவினர் புகார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதே போல விடுதலை சிறுத்தைகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது இது தொடர்பாக அனைத்து கட்சி சார்பில் பல குற்றச்சாட்டுகளை புகாராக  எழுதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

இந்த நிலையில் எதிர்பார்த்ததைப் போலவே சா.மு.நாசரின் அமைச்சர் பதிவி பறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பதவி பறிக்கப்பட்ட  அமைச்சர் என்ற அவப்பெயர் சா.மு.நாசருக்கு ஏற்பட்டுள்ளது. 

மாவட்ட செயலாளர் பதவியையாவது நாசர் தக்க வைத்துக்கொள்வாரா என்கின்றனர் நாசரின் எதிரணியினர். 

இதையும் படிங்க.!