கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 39 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் வரும், 2026ல் சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, த.வெ.க., தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில், இரண்டு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, நேற்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில், மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய், நேற்று மதியம், 12:00 மணிக்கு பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்த விஜய், நாமக்கல் மாவட்டம் ப.வேலுார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் வழியாக வேலுச்சாமிபுரத்திற்கு வர நீண்ட நேரமானது.ஆனால், தொண்டர்கள் நேற்று காலை, 10:00 மணி முதலே, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் குவியத் தொடங்கினர். இதில், குழந்தைகள், பெண்கள் அதிகம் பேர் திரண்டனர். இதனால், மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். தொடர்ந்து, போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தி மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, இரவு, 7:00 மணிக்கு பிரச்சார இடத்திற்கு, த.வெ.க., தலைவர் விஜய் வந்தடைந்தார். தொடர்ந்து மக்களிடையே பேச தொடங்கினார்.
அப்போது, அவர் பேசிய மைக் சரியாக வேலை செய்யவில்லை. மைக்கை சரி செய்வதற்காக, பிரசார வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தினர். அப்போது திரண்டிருந்த மக்கள் நகர இடமின்றி, ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உடனே பேச்சை நிறுத்திய விஜய், மயங்கி விழுந்தவருக்கு தண்ணீர் கொடுக்கும்படி மைக்கிலேயே கூறினார். மேலும், பிரசார வாகனத்தில் இருந்தபடியே, மயங்கி விழுந்தவரின் பகுதியில் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து உதவினர்.
அப்போது, ஆம்புலன்சை வரவழைத்த விஜய், மயங்கியவரை மீட்டு அழைத்து செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் பேச தொடங்கினார். இருந்தபோதும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தொடர்ந்து மயங்கி விழ துவங்கினர்.
மேலும், அங்கிருந்த சாலையோர பள்ளத்திலும் சிலர் விழுந்தனர். அதனால், நிலைமை மோசமானதால், 7:15 மணிக்கு விஜய் பேசுவதை முடித்துக் கொண்டு புறப்பட தயாரானார். அவரை பார்ப்பதற்காக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். இதில், குழந்தைகள் மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்தனர்.
தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மயங்கி கிடந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கும், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைகளை அழைத்து சென்ற பெற்றோர் கதறி அழுததால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசு மருத்துவமனையே போர்க்களம் போல காணப்பட்டது. திரும்பிய பக்கம் எல்லாம் கூக்குரல், அழுகை என சோகத்தில் மூழ்கியது. இரவு, 9:00 மணி நிலவரப்படி, குழந்தைகள் உள்பட, 35க்கும் மேற்பட்டோர் பலியானதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கரூர் கூட்டத்தில் விஜய் பேச துவங்கியதும், அவர் பிரசார வாகனத்திற்கு அருகே நின்ற கூட்டத்தினர் மத்தியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், சிலர் மயக்கமடைந்தனர். உடனே அவருக்கு தண்ணீர் கொடுக்குமாறு கூறி, விஜய் தன் பிரசார வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை வழங்கினார்.
அடுத்தடுத்து தண்ணீர் வேண்டும் என, கூட்டத்தில் இருந்து குரல் எழ, விஜயுடன் நின்ற ஆதவ் அர்ஜூனா மற்றும் விஜயின் பாதுகாவலர்கள் தண்ணீர் பாட்டில்களை ஒவ்வொன்றாக கூட்டத்தினரை நோக்கி வீசினர். மின்தடை செய்யப்பட்டு கும்மிருட்டாக இருந்த நிலையில், இவர்கள் வீசிய தண்ணீர் பாட்டிலை பிடிக்கவும், கீழே விழுந்த பாட்டிலை எடுக்கவும் கூட்டத்தினர் முண்டியடித்ததில், பலர் கீழே விழுந்தனர்.இதில், ஒருவரை ஒருவர் மிதித்ததே இவ்வளவு உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது.
கரூர் கூட்டத்திற்கு விஜய் வருவதற்கு முன்னரே, வேலுச்சாமிபுரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததும், மரம், கட்டடம் போன்றவற்றின் மீது இளைஞர்கள் பலர் ஏறியதும், அப்பகுதியில் மின் ஒயர்கள் அருகருகே சென்றதால், அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதாலும், மின்தடை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜய் பேசிய வேலுச்சாமிபுரம் பகுதியில், 15 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியதால், கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள், குழந்தைகள், உடல் நல பிரச்சினை உள்ளவர்களால், நெரிசலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கூட்டம் அதிகமானதால், ஏராளமானோர் அருகில் உள்ள கட்டடங்கள், மரங்கள் மீது ஏறினர். அதிகமானோர் மரங்களின் மீது ஏறியதால், அதன் கிளைகள் முறிந்து விழுந்தன. கூட்ட நெரிசலில் யார் எங்கிருக்கின்றனர் என்பதை அறிய முடியவில்லை. பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை காணாமல் கதறி அழுததையும் காண முடிந்தது. அரசியல் கூட்டத்தில் நடந்த, மிகப்பெரிய அசம்பாவிதம், தமிழகம் முழுதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் பிரசார கூட்டத்தில், கடும் நெரிசலில் மக்கள் சிக்கியதால், த.வெ.க., தலைவர் விஜய் தன் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டார். காரில் திருச்சி விமான நிலையம் வந்த அவரை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். ஆனால், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து, பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவே அவர் சென்னை வந்தடைந்தார்.
கரூர் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருச்சி வந்த விஜய் தனி விமானம் மூலம் நேற்றிரவு 11:15 மணியளவில் சென்னை வந்தார். தன் டுவிட்டர் பதிவில், ‘இதயம் நொறுங்கிப்போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். ‘கரூரில் உயிரிழந்த சகோதர – சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்’ என்றார்.
த.வெ.க., பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்குகிறது. உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நினைத்து மனம் வருந்துகிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள அவர்களுக்கு மனவலிமை கிடைக்கவும், காயம் அடைந்தோர் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.
கரூரில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. சம்பவ இடத்திற்கு வந்த துணை முதலமைச்சர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கு தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆகியோரை தொடர்பு கொண்டு அறிவுறுத்தி உள்ளேன். அருகில் உள்ள திருச்சி மாவட்ட அமைச்சர் அன்பில் மகேஷிடம், போர்க்கால அடிப்படையில், தேவையான உதவியை செய்து தரும்படி உத்தரவிட்டுள்ளேன்.
அங்கு விரைவில் நிலைமையை சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, கூடுதல் டி.ஜி.பி.,யிடம் பேசி இருக்கிறேன். டாக்டர்களுக்கும், காவல் துறைக்கும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பொறுப்பேற்ற அந்த மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் பொறுப்பேற்று இருந்த முக்கிய போலீஸ் அதிகாரிகளை உடனடியாக அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த மாவட்ட உளவுத்துறை அதிகாரிகளையும் மாற்றி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
விஜயிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். சென்னை வந்தடைந்துள்ள விஜயின் வீட்டிற்கே சென்று போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
