சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் வயது52 கடந்த ஐந்தாம் தேதி மாலை சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து சென்னை செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு பழி வாங்கும் விதமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவ வந்தது.
இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி, பொன்னை பகுதியைச் சேர்ந்த அவரது தம்பி பாலு வயது 39 மற்றும் கூட்டாளிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள சிலரை வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா பார்க் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இக்கொலையில் அரசியல் முன்விரோதம் எதுவும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்தார். இதற்கிடையே உணவு டெலிவரி ஊழியர்கள் போல சீருடை அணிந்த கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அவர்கள் அனைவரும் இளம் வயதினர். ஆனால் கைது செய்யப்பட்ட அனைவரும் 30 வயதை தாண்டியவர்கள்.
எனவே கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. தவிர ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டப்பட்ட விதம் தென் மாவட்ட ரவுடிகளின் கைவரிசை போல இருந்தது. கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் வெளி மாநில கூலிப்படைக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்ம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அஞ்சலிக்காக பெரம்பூரில் அவரது வீடு அருகே உள்ள பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் உத்திரப்பிரதேசம் முன்னாள் முதல்வருமான மாயாவதி நேற்று காலை ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அவரது மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் மாயவதி கூறியாவது:
ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். வீட்டின் அருகிலேயே அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளை நிச்சயம் பிடித்து இருக்கலாம். ஆனால் இந்த கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிப்படவில்லை.
எனவே ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக அரசு உடனடியாக சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் ஆம்ஸ்ட்ராங் கொலையால் வேதனையில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. வருத்தத்துடன் இருந்தாலும் அமைதியான முறையில் கருத்துக்களை தெரிவியுங்கள். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி துணை நிற்கிறது.
அவரது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் ஆம் ஸ்ட்ராங் விட்டு சென்ற பணிகளை தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.