தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் (pollachi sexual assault case) குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகியுள்ளது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர்கள் 9 பேருக்கும் சாகும் வரை சிறையில் இருக்கவேண்டும் என்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
![]()
”அண்ணா என்னை அடிக்காதீங்க” என்ற இளம்பெண்ணின் அழுகுரல் அலறல் சத்தம் அடங்கிய வீடியோ தமிழ்நாட்டையே நடுங்க செய்திருந்தது. இன்று தீர்ப்பு என்பதால் கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கபட்டு இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தீர்ப்பு அளித்தார். வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனவும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாட்டையே உலுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. கோவை பொள்ளாச்சி வழக்கு இளம் பெண் ஒருவரின் புகாரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒப்படைத்தது. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் காணொலி காட்சி முறையில் நடத்தப்பட்டு வந்தது.

குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதும் 2019ம் ஆண்டு மே 21ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்ததையடுத்து, இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், மே 13 செவ்வாய்கிழமை (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. இதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரூம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபணம் ஆகியுள்ளது. குற்றவாளிகளுக்கு சாகும் வரை தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். எதிர்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இளம் வயதினராக இருப்பதனாலும், திருமணம் ஆகாதவர்கள் என்பதாலும் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர்களின் தாய் தந்தை வயதானவர்களாக இருக்கிறார்கள், அவர்களை கவனிக்க வேண்டும் என்பதால் தண்டனையை குறைத்து வழங்க கோரிக்கை வைத்தனர். இன்று மதியம் 12.00 மணிக்கு நீதிபதி நந்தினி தீர்ப்பின் தண்டனை விவரங்களை வெளியிட்டார். அதில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக சேலம் சிறையில் இருந்து குற்றவாளிகள் 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் கோர்ட் வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பாலியல் குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என்று நீதிபதி தீர்ப்பளித்ததும் அவர்கள் சோகம் தொலைந்த முகத்துடன் கண்ணீர் மல்க அனைவரும் தலைகுனிந்து நின்றனர். நீதிமன்றத்திலேயே இந்தத் தீர்ப்பை கேட்ட வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பலர் நீதி பதியை பாராட்டினார்கள். ஒரு சிலர் இவர்களுக்கு ஆயுள் தண்டனை பத்தாது அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தீர்ப்புக்குப் பின்னர் அனைவரும் வளர்த்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
