‘பாதி விலைக்கு ஸ்கூட்டர் தருவதாக சொல்லி, 48,000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி, 281 கோடி ரூபாயை சுருட்டியவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்,” என, கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார்.கேரள சட்டசபையில் நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முரளி பெருநெல்லி, கேட்ட கேள்விக்கு பதிலளித்து, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: முக்கியமான நிறுவனங்கள், தங்களின் லாபத்தின் ஒரு பகுதியை சமூகப் பணிகளுக்காக ஒதுக்குவது, சி.எஸ்.ஆர்., எனப்படும் கம்பெனி சமூக பொறுப்புடைமை நிதி என அழைக்கப்படுகிறது. கேரளாவில் இந்த விவகாரத்தில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்துஉள்ளன.

.jpg?rect=0%2C39%2C750%2C422&w=480&auto=format%2Ccompress&fit=max)
முதல்வர் பினராயி விஜயன்.
பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி, அதற்கு, சி.எஸ்.ஆர்., எனும் கம்பெனி பொறுப்புத் திட்டத்தை கூறி, 48,386 பேரை இந்த கும்பல் ஏமாற்றி உள்ளது. இதன் வாயிலாக, 281.43 கோடி ரூபாயை வசூலித்துள்ளனர். 16,348 பேருக்கு மட்டும் பாதி விலையில் ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளனர்.
அதுபோல, குறைந்த விலைக்கு லேப் – டாப் தருவதாக கூறி, 36,891 பேரிடம் இருந்து 9.22 கோடி ரூபாயை வசூலித்துள்ளனர். அவர்களில், 29,897 பேருக்கு மட்டுமே லேப் – டாப்களை வழங்கிஉள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக, முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.