நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் சின்ராஜ்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இந்த நிலையில் இவர் நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா அருகில் தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.
திடீரென்று எம்.பி . தர்ணா செய்வதை பார்த்து அதிகாரிகளும் அங்கு வந்த பொதுமக்களும் காரணம் தெரியாமல் குழம்பி நின்றனர்.
இவரின் போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட நாமக்கல் மாவட்ட டி.ஆர்.ஓ கதிரேசன் தலைமையிலான அதிகாரிகள் எம்.பி. சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர் போராட்டத்தை கைவிடவில்லை. அதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது. இந்த நிலையில் 10:30 மணி அளவில் அங்கு வந்த ஆட்சியர் ஸ்ரேயா சிங் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த எம்.பி. சின்ராஜை சந்தித்தார்.
என்ன கோரிக்கை எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாக பதில் சொல்லாத எம்பி என் அதிகாரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறி ஒரு பதிலை கலெக்டரிடம் கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் பின்னர் அலுவலகத்திற்கு சென்று விட்டார். தொடர்ந்து சின்ராஜ் எம்.பி போராட்டத்தில் ஈடுபட்டார் . ஆனால் ஆட்சியர் மதியம் ஒரு மணிக்கு மீண்டும் வந்து எம்.பி. சந்தித்தார்.
அப்போது எம்.பி. இடம் ஆட்சியர் ஆகஸ்ட் மாதத்தில் சாலை பாதுகாப்புக் குழு கூட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சி பணிகள் கூட்டம் நடத்த எம்.பி. தேதி கேட்டார் மேலும் மின்வாரிய கணக்கு குழு கூட்டம் நடத்துவதற்கு கமிட்டி தேர்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் பிறகு நடத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் சொல்லவும் 3 மணி நேரமாக நடந்த போராட்டத்தை கைவிட்டார்.
எம்.பி போராட்டத்தை முடித்துக் கொண்ட பிறகு இது குறித்து எம்.பி.பத்திரிகையாளர்களை சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்த வேண்டும். இது தொடர்பாக பலமுறை கடிதம் அனுப்பியும் ஆட்சியரிடம் இருந்து பதில் இல்லை போனில் கேட்டால் கூட்டத்தை நடத்துவதற்கு அமைச்சர் தேதி கொடுக்க வேண்டும் என்று கூறி காலதாமதம் செய்து வந்தார்.
ஆனால் நான் சொல்லும் தேதியில் ஆட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்பது விதி கூட்டம் நடத்தப்படாததால் பல பணிகள் தேங்கியுள்ளன. இதனால் கால்நடை துறைக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த நிதி திரும்பி சென்று விடும் சூழ்நிலை உள்ளது . அதனால் இந்த போராட்டத்தை நடத்தினேன் என்று கூறினார்.
ஆளுங்கட்சியை எதிர்த்து அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்.பி ஆர்ப்பாட்டம் செய்தது நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது