chennireporters.com

மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது ஜெயலலிதா சமாதியில் சசிகலா..

அ.இ.அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டு தொடக்க விழா நாளை (அக். 17ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்றைய தினம் அஇஅதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். சிறைக்கு செல்லும் முன், ஜெயலலிதா சமாதிக்கு சென்று சத்தியம் செய்து சபதமொன்றை எடுத்திருந்தார்.

பின் சிறையிலிருந்து வெளிவந்த பின் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அறிவித்தார் சசிகலா.

பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாளர்களிடம் தொலைபேசியில் பேசி வந்தார்.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா இறந்து நான்கரை ஆண்டுகள் கழித்து தி.நகர் வீட்டில் இருந்து புறப்பட்ட சசிகலா வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

பத்து நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.வழி நெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு பெரும் வரவேற்பை அளித்தனர்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகலா என் மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது.

பாரத்தை அம்மா அம்மாவிடம் இறக்கி வைத்து விட்டேன்.நடந்த விஷயங்களை அவரிடம் சொல்லி இருக்கிறேன்.கட்சிக்கு நல்ல எதிர்காலம் இனிமேல் ஏற்படும் என்று சொன்னார்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா நல்ல எதிர்காலம் இருக்கிறது கவலைப்படாதீர்கள் விரைவில் எல்லாம் சரியாகி விடும்.

கட்சியையும் கழகத்தையும் காப்பாற்றுவேன் என்று சொல்லிவிட்டு சமாதியில் இருந்து புறப்பட்டு சென்றார். இதை தொடர்ந்து சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்கும் சென்று அவரது சிலைக்கு சசிகலா மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க.!