chennireporters.com

தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai_High_Court

ஊரடங்கில் இருந்து தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்பு நிலை திரும்பியதாக நினைத்து தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில், நாய்களுக்கு 2500 கிலோ உணவு வழங்கப்பட்டு, அவற்றை வழங்க 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.104 குதிரைகளுக்கு 3536 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கணக்கில், 19 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் இருப்பிலிருந்து, சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், பிற 14 மாநகராட்சிகளுக்கு 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான விஞ்ஞானபூர்வ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

பின்னர், தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக
சுந்தரத்திடம், ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் நிலவும் நடைமுறைகளை பார்க்கும்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போல பொதுமக்கள் நடந்து கொள்வதாக தெரிகிறது.

கொண்டாட்டங்களுக்கான நேரமில்லை இது என்று நீதிபதிகள் தெரிவித்தனர் அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்து கொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது.

பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என தற்போது காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதை, பொதுமக்கள் சாதகமாக எடுத்துக் கொண்டது, வெளியில் வருவதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதை மக்கள் உணரும் வகையிலும், வெளியில் சுற்றித்திரியக் கூடாது எனவும், ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க.!