chennireporters.com

நோய் பரப்பும் கோயில்.. கண்டுகொள்ளாத நிர்வாகம்.

திருவள்ளூர் அருகே ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்.

இந்தக் கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்மனிடம் வேண்டிக்கொண்டு 3 வாரம், 5 வாரம், 9 வாரம் என விரதம் இருப்பார்கள். கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து கோயிலை சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்கிற ஐ”தீகம்”இருந்து வருகிறது.

திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் அது தவிர சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என தமிழகம் முழுவதிலும் இருந்து பெண் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.

குறிப்பாக அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்தநிலையில் கொரோனா தொற்று காலத்தில் கோயில்கள் திறக்கக்கூடாது என்று அரசு அறிவித்திருந்த போதும் பக்தர்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
.
கோயில் நிர்வாகம் கோயிலின் முன்புற கேட்டை பூட்டி வைத்துள்ளனர் இருப்பினும் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு கேட்டின் முன்பு தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்வது வருகின்றனர்.

மேலும் அங்கப்பிரதட்சனம் செய்வதும் நேர்த்தி கடன் செலுத்துவது போன்ற எல்லா பிரார்த்தனைகளும் நடந்து வருகிறது.பக்தர்களும் சில பூசாரிகளும் அங்கு பூசை செய்து தருகிறார்கள்.

கோயிலை சுற்றி முககவசம் அணிய வேண்டும் என்கிற விளம்பரமோ அல்லது கோயில் தரப்பில் இருந்து வரும் பக்தர்களை ஒழுங்கு படுத்தி சாமியை தரிசனம் செய்துவிட்டுப் போகவேண்டும் என்கிற அறிவிப்பு எதுவும் அங்கு இல்லை.

அது தவிர கோயில் நிர்வாகிகளோ, அல்லது ஊழியர்களோ, கொரோனா தொற்று காலத்தில் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வதற்கு கூட அங்கு யாரும் இல்லை. இந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அமாவாசை தினத்தன்று மக்கள் கூட்டம்  அலைமோதியது.

கோயில் அருகே உள்ள கழிவறைகள் ஒன்று கூட சுத்தமில்லாமல் துர்நாற்றம் வீசியது.
வெளியூரிலிருந்து வந்த பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கழிவறைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

இது தவிர திருநங்கைகள் கோயிலை சுற்றி நின்று கொண்டு வரும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் எங்களிடம் திருஷ்டி கழித்துக் கொண்டுதான் சாமியைக் கும்பிட வேண்டும் என்று தடுத்து நிறுத்தி நபர் ஒருவருக்கு 50 ரூபாய் என்று அடாவடி வசூல் நடத்தி வருகின்றனர்.

இந்த வசூலில் கோயில் நிர்வாகிகளுக்கும் பங்கு தருவதாக திருநங்கைகள் வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகிறார்கள் . கோவிலின் இருபுறமும் எலுமிச்சை மாலை , வேப்பிலை தோரணம் விற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புட்லூர் ரயில் நிலையத்தில் இருந்து கோயில் அமைந்துள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு புறங்களிலும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு எந்தவித பாதுகாப்பு வசதியும் கோயிலில் நிர்வாகம் செய்து வைக்கப்படவில்லை. அது தவிர பக்தர்களும் கடைக்காரர்களும் ஒருவர் கூட முககவசமோ சமூக இடைவெளியை கடை பிடிக்கவில்லை.

கிருமினாசினி கபசுரக் குடிநீர் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் அமாவாசை, பவுர்ணமி,மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற  விசேஷ நாட்களில் வரும் பெண் பக்தர்களுக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்.பி.ஜான் வர்கீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியூர் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!