திருவண்ணாமலை பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்ட விவகாரம்.. அமைச்சர் வேலு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்ததால், தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாகி உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தால் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சாத்தனூர் அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தண்டராம்பட்டு அருகே உள்ள அகரம் பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமத்தை இணைக்கும் உயர்நிலைப் பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்தப் பாலம் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. 15.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலைப் பாலம் சுமார் 7 மீட்டர் உயரமும், 12 மீட்டர் அகலமும், 250 மீட்டர் நீளமும் கொண்டதாகும்.
புதிதாகக் கட்டப்பட்டு 90 நாட்களுக்குள்ளேயே 16 கோடி ரூபாய் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தி.மு.க ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்றுக் கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என்று பலரும் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீர் நிலைகளில் பாலம் கட்டும்போது நீர்வளத் துறை பொறியாளர்கள். மழை வெள்ளம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கன அடி வருகிறது என்பதை கணக்கீடு செய்து பாலம் அமைக்கப்படுகிறது
அதன் அடிப்படையில், 52 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்று பாலம் அதற்கேற்றவாறு கட்டப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக இரண்டே கால் லட்சம் கன அடி தண்ணீர் வந்ததால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்துக்கும், சாலையில் கட்டப்படும் மேம்பாலத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தரையில் கட்டப்படும் பாலம் வேறு, நீர்நிலைக்குள் கட்டப்படும் பாலத்தின் விதம் வேறு. தண்ணீர் திறந்து விடப்படுவதை கணக்கில் கொண்டு தான் ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.
மழை காரணமாக அதிக அளவு நீர் வந்ததால் சேதமடைந்துள்ளது. இதனால், ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரம் இல்லாமல் கட்டப்பட்டது என்று அர்த்தம் இல்லை. எதிர்பாராத விதமாக இதுபோன்ற ஆற்றுப்பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் சம்பவங்கள் ஏற்படுகின்றன.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று நூலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். இதுவரை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் நூலகத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள் முடிவந்துவிடும். தற்போது 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன என்று தெரிவித்தார்.
ஆனால் இணையதளத்தில் திமுக அரசின் கட்டப்பட்ட பாலம் தொடர்பாக பலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
வடமாநிலங்களில் கட்டப்பட்ட பாலம் அடித்து செல்லப்பட்டால் பாஜக அரசு குறை சொல்லும் திமுக கட்டிய பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டதற்கு முட்டுக் கொடு கேலிக்குரியது என்று பதிவு செய்து வருகின்றனர்.
அமைச்சர் சொல்வதைப் போல தண்ணீர் திறந்து விடும் அளவில் தரத்துக்கேற்ற மாதிரி கட்டப்படும் பாலம் வரும் காலங்களில் பெரும் வெல்லும் ஏற்பட்டால் அதை தாங்கும் அளவிற்கு தரமான பாலமாக கட்டப்படாததற்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே பாலம் கட்டிய ஒப்பந்ததாரர் அவருடைய சொந்த பணத்தில் மீண்டும் அந்த பாலத்தை கட்ட வேண்டும் அரசாங்கம் அந்த ஒப்பந்தத்திற்கு வழங்கிய பணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கேள்வியை இணையதளத்தில் அதிக அளவில் முன் வைத்து வருகின்றனர்.
பதினாறு கோடி ரூபாய் அமைச்சர் வேலு வீட்டில் சந்த பணம் அல்ல மக்களின் வரிப்பணம் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கிய ஒப்பந்ததாரர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
