(ஆங்கில மொழி: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 ஜனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஓர் சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாகச் சாடினார்.
இராமலிங்க சுவாமிகள்
திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்
பிறப்பு; 5 அக்டோபர் 1823
மருதூர், சிதம்பரம்,
இன்றைய கடலூரில், தமிழ்நாடு, இந்தியா
காணாமல்போனது
ஜனவரி 30, 1874 (அகவை 50)
மேட்டுக்குப்பம், வடலூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் “சத்ய ஞான சபை” என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளை கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக் கொள்கையாக ‘கொல்லாமை’ கொள்கை ஆகிய உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர். “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையை கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007ஆம் வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (5 அக்டோபர் 1823) இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சின்னகாவனம் பகுதிக்கு சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழு கிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் உருவ ஓவியம் இவரின் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை.இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க சுவாமிகளை கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள்,
“ ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் ”என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.

காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன் இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.
அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க அடிகளால் உருவாக்கப்பட்ட தருமசாலை இராமலிங்க அடிகள் மே 23, 1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.[1] மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.
நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
குருவை வணங்கக் கூசி நிற்காதே
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
பிறரை இகழ்ந்து பேசாதே..
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.அருள் விளக்க மாலைப் பாடல் (4174);
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே…..
