ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன்? உச்ச நீதிமன்றம்
ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
புது தில்லி: ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஏடிஜிபி ஜெயராம்.
உரிய விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன் என வழக்குரைஞர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், உரிய விளக்கம் கேட்டு நாளையே தினமே நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்க நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது.
அவசர வழக்காக முன்னதாக, ஏடிஜிபி ஜெயராம் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்த வழக்குரைஞர், உச்சநீதிமன்ற விடுமுறைகால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது அவர், “குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில் சீருடையில் நீதிமன்றத்தில் ஆஜரான உயர் காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.