100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என ஏழு இடங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் மனைவியிடம் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கரூர் மாவட்டம் வாங்கல் பிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மகளை கடத்தி மிரட்டி மோசடியாக நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
இதுபோல் கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவரும் போலியான சான்றிதழ்கள் கொடுத்து தனது நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். சார் பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் யுவராஜ் மற்றும் பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் ,நில உரிமையாளர் பிரகாஷின் மகள் சோபனா என ஆகிய ஏழு பேர் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதே போல் பிரகாஷ் அளித்த புகாரியில் எம் ஆர் விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் பிரவீன் உட்பட ஆறு பேர் மீது கொலை மிரட்டல் மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பிரகாஷ் வாங்கல் பகுதியில் வசிப்பதால் இவர் கொடுத்த புகார் மட்டும் வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற பயத்தால் எம் ஆர் விஜயபாஸ்கர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 5 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேரளா மற்றும் வடமாநிலங்களில் முகாமிட்டு விஜயபாஸ்கரை தேடி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்த சூழலில் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு கடந்த மாதம் 12ஆம் தேதி மனு தாக்கல் செய்தார் .அங்கு விசாரணை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த மாதம் 25ஆம் தேதி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் சிகிச்சையின் போது தான் உடனிருந்து கவனிக்க வேண்டும் என கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் மற்றும் முன் ஜாமின் கேட்டு ஜூலை 1ஆம் தேதி எம் ஆர் விஜயபாஸ்கர் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம்பெற்றுள்ள விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய மணல்மேடு அடுத்த தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் மீது கருர் தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ் வேலாயுதம்பாளையம் அடுத்த கவுண்டம்பாளையத்தில் உள்ள ரகு மற்றும் பத்திரப்பதிவின் போது சாட்சி கையெழுத்திட்ட முனிய நாதனூரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் 40க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து விஜயபாஸ்கரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 7:00 மணி முதல் கரூர் திருச்சி, நாமக்கல் சேலம், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்து இரண்டு டிஎஸ்பிகள் 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து கரூர் பெரியாண்டம் கோயில், என் ஆர் எஸ் நகரில் விஜயபாஸ்கர் குடியிருந்து வரும் அப்பார்ட்மெண்ட் இதே பகுதியில் உள்ள சாயப் பட்டறை மற்றும் தறி பட்டறை அலுவலகங்கள், ஆதரவாளர் தீபா ராஜேந்திரன் வீடு, கரூர் கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க், திருவிக சாலையில் உள்ள விஜயபாஸ்கரின் அறக்கட்டளை அலுவலகம் ஆகிய பகுதிகளில் ஏழு மணி முதல் ஒரு மணி வரை சோதனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் மட்டும் மாலை 4 மணி வரை சோதனை நடைபெற்றது. அப்போது அவரது மனைவி விஜயலட்சுமி இடம் ஒரு மணி நேரமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அங்கு சோதனை முடிந்த பின்னர் முக்கிய ஆவணங்கள் மற்றும் பென்ட்ரைவ் எடுத்துச் சென்றனர். மேலும் சின்னாண்டங் கோயில் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சரின் சகோதரர் சேகரின் வீட்டுக்குச் சென்ற போலீசார் வீட்டில் யாரும் இல்லாததால் சிறிது நேரத்தில் திரும்பிச் சென்றனர். இதேபோல் சென்னையில் அபிராமாபுரம் காவல் எல்லைக்குட்பட்ட சுந்தரம் சாலையில் உள்ள சாய் கருப்பா அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டில் நேற்று காலை 7:15 மணி முதல் பிற்பகல் வரை சிபிசி இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இவ்வாறு நேற்று ஒரே நேரத்தில் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்துவார்களா என்று தனக்கு வேண்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு போன் போட்டு கேட்டதாக ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
அதேபோல விழுப்புரம் ஆர்டிஓ முக்கண்ணன் அந்தப் பகுதியில் உள்ள ஒரு லாரி வியாபாரியிடம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை சொல்லி லாரி மற்றும் முந்திரி தோப்பு ஆகிய இடங்களை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது. அது குறித்தும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.