chennireporters.com

விண்வெளியின் வீரமங்கை கல்பனா சாவ்லா காவியம்!

முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவு தினம் இன்று. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைகிறது. நாசாவில் உள்ள அனைவரும் அந்த விண்கலத்தையும், அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேரையும் வரவேற்பதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விண்கலம் தரையிறங்க இன்னும் 16 நிமிடங்களே இருந்தன. மற்ற விஞ்ஞானிகள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், அந்த விண்கலம் திடீரென வெடித்துச் சிதறிவிடுகிறது. அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேரின் உடலும் உடல் சிதறிவிடுகிறது.

ஆம் இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அவருக்கு பின் இந்தியாவில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வாழ்க்கையை பாடமாக்கிவிட்டு, நம் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றுச் சென்றுவிட்டார்.

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா 1962ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி பிறந்தார். தாகூர் பால் நிகேதன் பள்ளியில் பள்ளிப்படிப்பும், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் 1982ம் ஆண்டு ஏரோநாடிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டமும் பெற்றார்.

அமெரிக்கா சென்று 1984ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார். 1986ம் ஆண்டு கொலோரடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலை பட்டமும், 1988ம் ஆண்டு விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பின்னர் அதே ஆண்டில் நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றத் தொடங்கினார். விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக்கற்றுக்கொடுக்க தகுதிச்சான்று பெற்றார்.

ஒன்று மற்றும் பல இன்ஜின்கள் பொருத்திய விமானம் மற்றும் கடல் விமானங்கள், கிளைடேர்களையும் ஓட்ட கல்பனா சாவ்லா அனுமதி பெற்றிருந்தார். 1995ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்த அவர், 1996ம் ஆண்டு முதல் விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

கல்பனா சாவ்லா விண்வெளி பயணம் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்டிஎஸ்-87ல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவராக தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். தனது முதல் பயணத்தில் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணித்து, பூமியை 252 முறைகள் சுற்றி வந்துள்ளார்.

அப்போது ஸ்பார்டன் என்ற செயல் குறைபாட்டிலிருந்து செயற்கைகோளை கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். பின்னர் 2001ம் ஆண்டு எஸ்டிஎஸ் 107 விண்களத்தில் சென்று, மைக்ரோகிராவிட்டி சோதனைகள், விண்வெளி வீரர்களுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி என பல்வேறு பரிசோதனைகளையும் மேற்கொண்டு பூமி திரும்பிய பிப்ரவரி 1ம் தேதிதான் அந்த சோக நிகழ்வு, இந்தியாவை மட்டுமல்ல உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவர் தனது முதல் விண்வெளி பயணத்தில் இருந்தபோது, அப்போதைய இந்திய பிரதமர் ஐ.கே.குஜராலிடம் செயற்கைகோள்கள் எடுத்த இமயமலையின் புகைப்படங்களை காட்டியிருக்கிறார். விண்வெளி துறை எவ்வளவோ முன்னேறிவிட்ட இந்த காலத்தில் கூகுள் எர்த்தை கையில் வைத்துக்கொண்டு நாம் சுற்றுமளவுக்கு வசதிகள் பெருகிவிட்ட இன்றைய நாளுக்கு விதைபோட்ட அவர், எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்தப்படத்தை நமது பிரதமரிடம் காட்டியிருப்பார். நமது பிரதமரும் அந்த படங்களை எவ்வளவு ஆர்வமாக பார்த்திருக்கக்கூடும் என்பது நமது கற்பனையைவிட அதிக நெகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணமாக இருந்திருக்கக்கூடும்.

வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்பனா சாவ்லா ஒரு ரோல் மாடல். 40 ஆண்டுகள் மட்டுமே மண்ணில் வாழ்ந்தவர். 80ஸ், 90ஸ் கிட்ஸ்களில் சாதிக்க துடித்த ஒவ்வொருவருக்கும் கல்பனா சாவ்லாவும், அவரது சாதனைகளும் அடியுரமாக அமைந்தது. 2கே கிட்ஸ்கள் மட்டுமல்ல கல்பனா சாவ்லா குறித்து இந்த உலகம் இருக்கும் வரை பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தெரிந்திருப்பது மிகமிக அவசியம்.

அவரது நினைவாக அவரது வேண்டுகோளை ஏற்று கல்பனா படித்த பள்ளியிலிருந்து 1998ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சம்மர்ஸ்பேஸ் எக்ஸ்பீரியன்ஸ் ப்ரோக்ராமில் இரண்டு மாணவர்கள் நாசாவுக்கு செல்வார்கள்.

கல்பனாவின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் வீரதீரசாகசச் செயல் புரியும் இளம்பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி 2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசு கல்பனா சாவ்லா விருதினை 2004ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. கல்பனா சாவ்லா நினைவு உதவித்தொகை பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது.

2001ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு தெருவிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!