chennireporters.com

மனிதர்களின் உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன? டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம்.

நாம் ஏன் குண்டாகிறோம்??

டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.

நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ??

மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம். ஏன் நாம் குண்டாகிறோம்???  இதற்கும்
நாம் உட்கொள்ளும் உணவு முறை தான் முதற்காரணம்.  வேறு என்ன இருக்க முடியும்??

நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா??

நாம் தினமும் அரிசியில் செய்யப்பட்ட இட்லி தோசை சாதம் என ஃபுல் கட்டு கட்டுகிறோம்.
அதோடு நில்லாமல் ஸ்நேக்ஸ் என்ற பெயரில் ரீபைன்டு சுகரில் செய்யப்பட்ட ஸ்வீட்ஸ், எண்ணெயில் பொறிக்கப்பட்ட வடை, பஜ்ஜிகள், புரோட்டாக்கள், பப்ஸ், சமோசா. பீட்ஸா, பர்கர், சேன்ட்விச், ஐஸ் கிரீம்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை.

நம் முன்னோர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்??

அவர்கள் உண்ட உணவில் மாவுச்சத்தின் அளவுகள் மிகவும் குறைவாக இருந்தன ஆனால் நமது உணவில் மாவுச்சத்து மட்டுமே பிரதானமாக நிரம்பியிருக்கிறது.

என்றாவது நாம் யோசித்திருப்போமா??
ஏன் தினமும் மூன்று வேளையும் சதா அரிசியில் செய்த உணவுகளையே உண்டு வருகிறோம் என்று??

நமது உடல் குண்டாவதற்கு காரணம் அது தான்..
ஆம் நாம் உண்பது அதிக மாவுச்சத்துள்ள உணவு முறை நம்மை குண்டாக்குவதற்கே படைக்கப்பட்ட ஹார்மோன் “இன்சுலின்” (insulin)

பசி பஞ்சத்தில் இருந்து நம்மைக் காக்க நமக்கு அருளப்பட்ட அமிர்தம் இந்த இன்சுலின். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே

இந்த இன்சுலின் என்ன செய்கிறது தெரியுமா??  மனிதன் அதிகமான மாவுச்சத்தை சாப்பிட்டால், அதை வைத்து சிறிதை கல்லீரலில் க்ளைகோஜனாகவும் பெரும்பகுதியை கொழுப்பாகவும் ( triglycerides) சேமிக்கிறது.  ஏன் இப்படி கொழுப்பை சேமிக்கிறது??

Triglycerides

வரப்போகும் பஞ்சத்தை நாம் தாக்குப்பிடிக்கும் விதமாக இந்த சேமித்த கொழுப்பு பயன்படும் என்ற நல்ல நோக்கத்தில் தான்.

உங்கள் கேள்வி புரிகிறது..

இப்போது தான் பஞ்சமே வருவதில்லையே??

ஆம் நமக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டு சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
பிறகும் ஏன்.. பஞ்சத்தில் இருப்பவர்களைப் போல உணவு கிடைத்தால் போதுமென மூன்று வேளையும் சதா மாவுச்சத்தை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம் ??

இதனால் இன்சுலின் அதிகமாகச் சுரந்து உண்ணும் மாவுச்சத்தில் பெரும்பகுதி கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது.  இது தான் நமது தொப்பையில் சேமிக்கப்படுகிறது.  மாவுச்சத்து உண்ண உண்ண இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கிறது.

இன்சுலினை சுரக்கும் கணையத்தின் பீட்டா செல்கள் மூச்சுத் திணறுகின்றன. நாகரிக மனிதனின் கண்டுபிடிப்பான “ரீபைன்டு சுகர்” எனப்படும் சீனி கணையத்தில் உள்ள இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்களை ஒரே அடியில் கொலை செய்தேவிடுகின்றன.

ஆம்.. ரீபைன்டு சுகர் சந்தைக்கு வந்ததும் தான் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

ஆனால் நம்மிள் பலரும் சீனிக்கு மாற்றாக நாட்டு சர்க்கரையைப் போட்டு டீ அருந்துகிறோம்.  ஆனால் சீனி என்பது நாட்டு சர்க்கரையை ரீபைன் செய்வதால் கிடைப்பது என்பதும் நாட்டு சர்க்கரை மற்றும் சீனி இரண்டிலுமே சுக்ரோஸ் இருக்கிறது என்பதும் இரண்டுமே நீரிழிவை மோசமாக்கும் என்பதும் கூடவே உடல் எடையைக் கூட்டும் விசயங்கள் என்பதையும் நாம் உணர வேண்டும்.

இந்த உடல் பருமன் நோய்க்குக் காரணம் நமது உடலில் அதிகமாகச் சுரப்பதும் / சுரக்கப்பட்ட இன்சுலினும் வேலை செய்யாமல் போவது தான் இதைத் தான் “இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்” என்கிறோம்.

இன்சுலின் மட்டும் தான் காரணமா?? இல்லை இன்னும் இரு ஹார்மோன்கள் இருக்கின்றன.

முதல் ஹார்மோன்
“க்ரெலின்” (GHRELIN)
இரண்டாவது ஹார்மோன்
” லெப்டின்” (LEPTIN)

இந்த க்ரெலின் இருக்கிறானே இவனது வேலை பசியைத் தூண்டிக்கொண்டே இருப்பது வயிறு காலியானால் உடனே சுரக்கப்பட்டு, மூளைக்கு அலாரம் அடித்து பசிக்கான பகுதி தூண்டப்படும் (appetite center) , பசி எடுக்கும் நாம் பசி எடுத்ததும் சாப்பிடுவோம் வயிறு நிறையும் நமக்கு நிறைவு ஏற்பட்டு பசி அடங்கியதும், லெப்டின் சுரக்கப்படும். அது மூளையின் திருப்திக்கான பகுதியைத் தூண்டும்( satiety center)பசி அடங்கும் இதுதான் சரியான நடைமுறை ஆனால் குண்டாக இருப்பவர்களுக்கு (obese persons) , க்ரெலின் மட்டும் நன்றாக வேலை செய்வான்.

லெப்டின் மக்கர் செய்ய ஆரம்பிப்பான். ஏன் என்றால்.. லெப்டின் மூளைக்குச் சென்று திருப்திப் பகுதிக்குச் சென்று தனது வேலையைச் செய்வதை குண்டான மனிதரின் கொழுப்பான ட்ரைகிளசரைட்ஸ் தடுத்து விடுகின்றன. இதை “லெப்டின் ரெசிஸ்டெண்ஸ்” என்கிறோம்.

ஆகவே லெப்டின் வேலை செய்யாத நிலையில் , க்ரெலின் மட்டும் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்து கொண்டே இருப்பதால் நாம் தொடர்ந்து உண்டு கொண்டே இருக்கிறோம் ..
குண்டாகிறோம்.

இதில் இன்னொரு தகவல் யாதெனில் இந்த க்ரெலின் ,மாவுச்சத்தை உண்போருக்கு அதிகமாகவும புரதச்சத்தையும் கொழுப்பையும் அதிகமான அளவு உண்போருக்கு குறைவாகவும் சுரக்கிறது.

கார்ப்ஸ் ( மாவுச்சத்து) உண்பவர் அனுதினமும் பசியெடுத்து எதையாவது கொரித்துக் கொண்டே இருப்பதற்கும், புரதம் நிரம்பிய கொழுப்புணவை உண்பவர் 20 மணிநேரம் விரதம் இருந்தாலும் கோரப் பசி தோன்றாமல் இருப்பதற்கும் இது தான் காரணம்.

ஆகவே உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து , புரதத்தை தேவையான அளவு உண்டு, கொழுப்பையும் அச்சமின்றி எடுத்துக்கொண்டால்
தொப்பை கரையும் கூடவே உடற்பயிற்சியும் சேர்ந்தால் தொப்பை இன்னும் வேகமாகக் குறையும்.  கொழுப்பைக் கொழுப்பால்தான் கரைக்க முடியும்.

உணவை மாற்றுவோம்
உடலைக் காப்பாற்றுவோம்.

டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.

இதையும் படிங்க.!