சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொல்லப்பட்டதையும் கனிமவள கொள்ளை மீது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசையும் அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.சட்டவிரோத குவாரி முறைகேடுகளை, ஊழல்களை எதிர்த்து போராடி வந்த புதுகோட்டையை சேர்ந்த ஜகபர் அலி கொல்லப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அப்பகுதியில் அவர் தொடர்ந்து சட்டவிரோத குவாரி ஊழல் முறைகேடுகளை எதிர்த்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் போராடி வந்துள்ளார் என்பதும், அப்படிபட்ட ஒரு மிகப்பெரிய சட்டவிரோத கனிமவள கொள்ளையை குறித்து புகார் கொடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்டு இருக்கிறார் என்பது அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை காட்டுகிறது.
முதல்வர் ஸ்டாலின்
முக்கியமாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வரும் ஒரு வீடியோவில், அவர் RR குழு என்னும் நிறுவனம் மிகப்பெரிய சட்டவிரோத கனிமவள கொள்ளையில் ஈடுபட்டதாகவும், இது குறித்து அவர் தாசில்தார், RDO, DRO, ஆட்சியர், கனிமவளத்துறை என அனைவருக்கும் புகார் கொடுத்ததாகவும், தாசில்தார் அந்த தகவலை அந்த நிறுவனத்திடமே கசிய விட்டதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும் அந்த நிறுவனம் மீண்டும் சக்கை கற்களை பதுக்கி வைத்த இடத்தில் இருந்து, அவர்கள் குவாரியிலேயே கொண்டு போய் கொட்டி வருவதாகவும் தெரிவித்தார். இதன் பிறகு தற்பொழுது அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளி வந்துள்ளது.
மேலும் லாரி ஓட்டுனர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளதாக அறிகிறோம். ஆனால் கொலைக்கு காரணமான பெரிய முதலைகள் யார்? ஏன் அரசால் அவர்களை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விருப்பமில்லையா? அரசு இது போன்ற சட்டவிரோத கனிமவள கொள்ளையை தொடர்ந்து ஊக்குவிப்பதும், அரசில் உள்ள அதிகாரிகள் கனிமவள கொள்ளைக்கு குவாரி அதிபர்களுடன் கூட்டு சதியில் ஈடுபடுவதும் இது போன்ற கொலைகளுக்கும் தமிழ்நாடு முழுக்க மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. இது போன்று நம் மண்ணின் வளங்களை காக்கவும், ஊழல்களை தடுக்கவும் போராடும் ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுக்க பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
![]()
அவர் கொலைக்கு காரணம் தமிழ்நாடு அரசின் சட்டவிரோத குவாரி ஆதரவு கொள்கை தானே?? மேலும் அவர் வீடியோவில் குறிப்பிட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகமோ, கனிமவளத் துறையோ சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருந்தால், அவரை காப்பாற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்று அநீதிக்கு எதிராக போராடும் மக்களின் போராடும் உரிமைகளை நசுக்கி ஆளும் கட்சிக்கு வேலை செய்வது தான் சட்ட ஒழுங்கை காப்பாற்றும் வேலை என்பது போல் வேலை செய்து வருவது அபத்தம்.
மாறாக இது போன்ற அநீதிகளுக்கு எதிராக போராடும் உயிர்களை பாதுக்காப்பதும், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுமே தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை தடுக்கும் என்று உணர வேண்டும். காவல்துறையின் அமைச்சர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் இந்த சீரழிவிற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொல்லப்பட்டதையும் கனிமவள கொள்ளை மீது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசையும் அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கோரிக்கைகள்:
1. ஜகபர் அலி கொலைக்கு காரணமான பெரிய முதலைகளை உடனடியாக காவல்துறை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விரைவாக தண்டனை பெற்று தர வேண்டும்.
2. ஜகபர் அலி சொன்ன புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், மேலும் அதை குவாரி அதிபருக்கே கசிய விட்டவர்கள் என அனைத்து அதிகாரிகள் மீதும் உடனடியாக துறை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. தமிழ்நாட்டில் அரசின் உள்ளும், வெளியும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களை எதிர்த்து குரல் கொடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உயிரை பாதுகாக்க Whistleblowers Protection சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும்.
4. கனிமவளத்துறை கனிமவளங்களை கொள்ளை அடிப்பதற்காகவே செயல்படும் துறையாக இயங்கி வருகிறது. எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ள இந்த துறை சீரமைக்கப்பட வேண்டும்.
5. சட்டவிரோத கனிமவள கொள்ளைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை நடவடிக்கை எடுக்காத அமைச்சர் துரைமுருகனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு அறப்போர் இயக்கம் 5 கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கல்குவாரி அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலையில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் தூக்கிலிட வேண்டும் ஒருவரையும் தப்ப விடக்கூடாது தற்போது அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
