தன்மகன் ஹிமாயூன்காக துடிதுடித்த முகலாய மன்னர் பாபரை போல வா துடிக்கிறார் வைகோ என்று எழுத்தாளர் சமரன் நாகன் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது.
எழுத்தாளர் சமரன் நாகன்.
முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறார் துரை வைகோ. மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக இருந்து வந்த மோதல் போக்கு உச்ச கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது.
திமுகவில் மு க ஸ்டாலினுக்கு தளபதி பட்டமா? மதிமுகவில் மல்லை சத்யாவிற்கு சேனாதிபதி பட்டம். திமுகவில் மு க ஸ்டாலினுக்கு மாநில இளைஞர் அணி பொறுப்பா? மதிமுகவில் மல்லை சத்யாவிற்கு இளைஞர் அணி பொறுப்பு.
இப்படியாக, அன்றைக்கு, தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கு திமுகவில் என்னென்ன பதவிகள் கொடுத்து கலைஞர் அழகு பார்த்தாரோ, அதற்கு கொஞ்சமும் குறைவின்றி, சேனாதிபதி மல்லை சத்யா அவர்களுக்கு மதிமுகவில் பதவிகள் வழங்கி அழகு பார்த்தார் வைகோ. அண்ணன் மல்லை சத்யாவும், வைகோவின் நிழலாக, வலது கரமாக, பெருத்து விசுவாசம் உள்ள சேனாதிபதியாக இருந்து வந்தார்; வருகின்றார்.
வைகோ விரல் நீட்டி கைகாட்டியவர்கள் மீதெல்லாம் பாய்ந்து கடித்துக் குதறுகின்ற வேட்டை நாயாக, வைகோவை கணப்பொழுதும் காத்து நிற்கின்ற மிகுந்த நன்றி உணர்வு கொண்ட மெய்க்காவலனாக வைகோ யாரையெல்லாம் எதிர்த்தாரோ, அவர்களோடு எல்லாம் களத்தில் மல்லுக்கட்டி நின்று ஒரு அபிமன்யுவாக அசாத்திய துணிச்சலுடன் வலம் வந்தவர் மதிமுகவின் இளம் தலைவராக அறியப்பட்ட அண்ணன் மல்லை சத்யா அவர்கள். கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்த அந்த சத்யாவின் உழைப்பிற்கு விலையாக அவர் உயிர் கேட்கப்படுகிறது.
மதிமுகவில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும், ஈ.வெ.ரா, அண்ணா, வைகோ, துரை வைகோ மட்டுமே மதிமுகவின் அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் இருக்கலாம். மறுப்பவர்கள் உடனே வெளியேறலாம். இது துரை வைகோ காலம் என்கிறது துரை வைகோவின் சேனைகள்.
அரசியலில் நுழைவதற்கு அதிகபட்ச தகுதிகள் வேண்டியதில்லை. கடினமாக உழைக்கத் தேவையில்லை. தலைவரான தந்தையின் ஆசியும், கட்சி நிர்வாகிகள் உதவியும் இருந்தால் போதும். தொண்டர்கள் வந்து கூடிவிடுவார்கள். அடுத்த வாரிசுக்கு பட்டாபிஷேகம் செய்து விடுவார்கள். ஆனால் பரம்பரை ஆட்சி முறையின் முதல் சாபக்கேடு, அந்தப் பரம்பரையில் பிறந்த ஆண் மகன் எப்போது நிகரற்ற வீரனாக, அறிவாளித்தனங்கள் நிறைந்தவனாக, செயலும் ஊக்கமும் பெற்றவனாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது.
அதனால் தான் மல்லை சத்யாவே வெளியேறுங்கள் என்கிறார் வைகோவின் மகன். இது எங்கப்பன் வீட்டு சொத்து. நீ யார்? வெளியே போ’ என்பதாக தானே இதை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக இருந்து வந்த மோதல் போக்கு வைகோவுக்கு தெரியாமலா இருந்து இருக்கும்.? இதை மோதல் என்று கூட சொல்ல முடியாது. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக மல்லை சத்யா வெகுவாக அவமானப்படுத்தப்பட்டார்.
சத்யாவை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக்கூடாது. அவரது புகைப்படத்தையோ, பெயரையோ எந்த துண்டறிக்கையிலிலும் சுவரொட்டிகளிலும் போடக்கூடாது என்றெல்லாம் அவர் சிறுமைப் படுத்தப்பட்டார். பகட்டு வேஷம், பத்தினி வேஷம், நம்பிக்கை துரோகி என அவதூறுகள் அவர் மீது வீசப்பட்டன.
இதெல்லாம் வைகோவுக்கு தெரியாமலா நடந்திருக்கும்?
எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து வைகோ வெளியேறினாரோ, எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுகவை உருவாக்கினாரோ, அந்த மதிமுகவில் வாரிசு அரசியல் முன்னிறுத்தப்பட்டு மதிமுக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் மல்லை சத்யா தூக்கி எறியப்படுகிறார். ஆரம்பத்திலேயே இருவரையும் அழைத்து பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிந்து இருக்கலாமே.? அண்ணன். வைகோ ஏன் அதை செய்யவில்லை?
தன் மகன் ஹுமாயூனுக்காக துடிதுடித்த மொகலாய மன்னர் பாபரை போலிருப்பது தான் அண்ணன் வைகோவிற்கு அழகா? தந்தைக்கு மகன்தான் முக்கியம். மகனுக்காக அவமானங்களையும் எல்லாவிதமான பொறுத்துக்கொள்ளவும், உயிர் கொடுக்கவும்கூட தந்தை தயாராக இருக்கிறார். அதற்கு சரித்திரம் முழுவதிலும் அத்தனை அத்தனை சான்றுகள் இருக்கின்றன. அதற்கு அண்ணன் வைகோ மட்டும் என்ன விதிவிலக்காகவா இருந்துவிடப் போகிறார்?
பெருத்த விசுவாசத்திற்கும் மிகுந்த நன்றி உணர்விற்கும் விலையாக, வாரிசு அரசியலுக்கு இடராக இருந்த வைகோ நம்பிக்கை துரோகி என்று முத்திரை குத்தி, திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதையே தான் அண்ணன் மல்லை சத்யாவிற்கும் செய்ய காத்திருக்கின்றாரா தலைவர் வைகோ? என்று தனது முக நூல் பக்கத்தில் கட்டுரையாக எழுதியுள்ளார் சமரன் நாகன்.