chennireporters.com

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை.

கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில், ரெட்பிக்ஸ் சேனலில் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்திருந்தார். அவரது பிளாக்கிலும் எழுதியிருந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டிருந்தது.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமிகஸ்கியூரியாக (நீதிமன்றத்துக்கு உதவி செய்பவர்) நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சோமயாஜி காணொலி வழியாக வாதிடுகையில், ”சவுக்கு சங்கர் பேசியதும், எழுதியதும் நீதிமன்ற அவமதிப்பு தான் இதற்காக அவரை தண்டிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, சவுக்கு சங்கர் பதில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையின்போது, நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக தெரிவித்தது உண்மையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சவுக்கு சங்கர், நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நீதித்துறையின் மதிப்பை குறைத்தோ, களங்கப்படுத்துவதோ எனக்கு நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்பிற்கு உட்பட்டதல்ல. ஆகவே இந்த வழக்கை மதுரைக்கிளை விசாரிக்க இயலாது. நீதித் துறையில் இடஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை. பிராமணர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3% இருந்தாலும், நீதித்துறையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் பெருமளவில் பட்டியல் இனத்தவர்கள் இருந்தாலும், நீதித் துறையில் அவர்களின் பங்கு மிகக்குறைவாகவே உள்ளது.

அருந்ததியர் இனத்தில் ஒரு நீதிபதி கூட இல்லை. இதனால், பட்டியலின நீதிபதிகள் வழக்குகளைக் கையாள்கையில், அவர்களின் முழு பங்கையும் அளிக்க இயலவில்லை. பிற நீதிபதிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுதொடர்பாக பல நீதிபதிகள் மற்றும் நீதித் துறை அமைப்புகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே இந்த கருத்தை பதிவு செய்துள்ளேன். எனது சில கருத்துக்களை தனியே பார்க்கும்போது அது மிகுந்த பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலானதாகத் தோன்றலாம்.

ஆனால், அதன் பின்புலத்தோடு உண்மை விளங்கும். நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் இருந்து நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யுமாறு வெளியிட்ட பதிவுகளை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். சவுக்கு சங்கர் இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிக்கை வைத்தார். ஆனால், நீதிபதிகள் அதை நிராகரித்தனர். அதன் பின்னர் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க.!