உலகத் தாய்மொழி தினம் ;
உலகத்தில் எத்தனை மொழிகள் இருந்தாலும் மூத்த மொழி முதல் மொழி தாய் தமிழ் மொழி தான் என்பதில் வரலாறு நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. உலகத்தின் அனைத்து மூளைகளிலும் தமிழர்களும் தமிழ் சம்பிரதாயங்களும், கலாச்சாரங்களும் வேரூன்றி கிடக்கிறது என்பதற்கு மறுப்பு சொல்ல முடியாது
அம்மா என்ற வார்த்தை உலகம் முழுவதிலும் எல்லா மொழிகளிலும் பேசப்பட்டு வருகிறது. எனவே உலக தாய்மொழி தினமான இன்று சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ் ஆர்வலர்கள் என பலரும் தமிழை கொண்டாடி வருகின்றனர். தமிழைப் போற்றியும், வாழ்த்தியும் வாழ்த்து செய்திகளும், தமிழின் பெருமைகளையும் வள்ளுவனை உலகினுக்குத் தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு பற்றியும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.
மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக் கொண்டாலும் தாய்மொழி பற்றி இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
அந்த வகையில் தமிழ் மொழியின் சிறப்பை போற்றும் வகையிலும் தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும் ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999 ஆம் ஆண்டில் இன்ஸ்கோ பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 2000 ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் சர்வதேச தாய்மொழி தினத்திற்கான கருப்பொருள் பன்மொழிக் கல்வி குறித்த இளைஞர்களின் குரல்கள் என்பதாகும். உலக அளவில் கடைபிடிக்கப்படும் அல்லது கொண்டாடப்படும் ஒவ்வொரு நாளுக்குப் பின்பும் ஒரு வரலாறு இருப்பதைப் போன்று உலக தாய்மொழி நாளுக்கும் பெரும் தியாக வரலாறு உண்டு.
இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது இன்றைய வங்கதேசமான கிழக்கு வங்கமும் பாகிஸ்தானின் அங்கமாக மாறியது. பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. அதை கண்டித்தும் வங்க மொழியை ஏற்க வலியுறுத்தியும் 1952 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 21ஆம் நாளில் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது அப்துஸ்ஸலாம், அபுல் பர்கட், ரபீக் உத்தின் அகமது , அப்துல் ஜஃபார், சபியூர் ரஹ்மான் ஆகிய ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
அவர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும் அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டியது தேவையை வலியுறுத்தும் வகையில் அந்நாளை உலகத் தாய்மொழி நாளாக இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.
