chennireporters.com

ஆவீன் ஊழல் வழக்கு ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் திடீர் கைது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி வாங்கி கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 5-ந் தேதி கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் வைத்து ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமனா தலைமையிலான அமர்வு முன் கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும்.வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டி பயணிக்கக்கூடாது.

விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளையும் சுப்ரீம் கோர்ட் விதித்தது.

இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரது வக்கீல் ஒப்படைத்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன் வெளியே வந்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் அளித்த விஜய நல்லதம்பி என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை வாங்கி தருவதாக ரூபாய் 30 லட்சம் மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் விஜய் நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரில் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!