chennireporters.com

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது தனி நீதிபதி தீர்ப்பு ரத்து ; சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு முழுவிவரம்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பு ரத்து ;

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு முழுவிவரம். வருமாறு சென்னை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.

இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.

தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே தவிர, 1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல எனவும் சுட்டிக்காட்டினர். பன்னீர்செல்வம் தரப்பில், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும்,கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமேபொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது எனவும் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.அதில் எடப்பாடி பழனிசாமி ஜூலை 11 கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து என்றும் சென்னை ஐகோர்ட் தீரப்பளித்துள்ளது. தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியதாவது:-

பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு அதிமுக சட்ட விதிகளின் படி மட்டுமே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி ப்ழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும்.

ஒற்றை தலைமையின் நோக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளது;அதிமுக சட்ட விதிகளின் படி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்ற வாதம் ஏற்கப்பட்டது என கூறினார். தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படுகின்றன. இதனால் ஓ பன்னீர்செல்வத்தை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி நீக்கியது செல்லும். எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பெயரில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது செல்லும். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எல்லோரும் நீக்கப்பட்டது செல்லும். பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்ததால், தேர்தல் ஆணையம் இதை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி தரப்பினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க.!