chennireporters.com

கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்திய வருகின்றனர் இதில் பல முக்கிய ஆவணங்களும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கனிமவளத்துறை பொதுப்பணித்துறை வட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர் லஞ்சப் பேய்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் பொதுப்பணித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து தற்போது அயல் பணியாக மீன்வளத் துறையில் பணிபுரிந்து வரும் மகேஷ் என்பவரது வீட்டில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

2013 – 2022 வரையான காலகட்டங்களில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவில் அருகே சிவந்தி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமீபம் கேசவன் புதூரில் உள்ள அவரது வீட்டில் இன்று (17-11-2023) காலை 7.15 மணி முதல் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

 

லஞ்சம் வாங்கிய பணத்தில் பல வீடுகள் கட்டியுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 12 வருடங்களுக்கு முன் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் சிக்கிய தக்கலை மதுவிலக்கில் பணிபுரிந்த கணேசன் என்பவரது மருமகன் மகேஷ் என்று கூறப்படுகிறது.

சோதனையின் முடிவில் தான் மேலும் கூடுதலாக வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார் என்ற அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. முக்கிய பிரமுகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துள்ளதாகவும் அதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க.!