chennireporters.com

இந்தியாவின் குரல் ஒலிக்கவேண்டும் என்பதற்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் ராகுல் ட்விட்.

நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன் என்று எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது twitter பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில்” இந்தியாவின் குரல்” தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பதற்காக நான் போராடுகிறேன்.  அதற்காக எந்த ஒரு விலையையும் நான் கொடுக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிகாரத்தின் முன்பாக உண்மையை பேசியதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  “மக்களின் நலனுக்காகவே அவர் குரல் கொடுத்து வருகிறார்”. 

அவர் என்ன பெரிய தவறு செய்துவிட்டார். இது பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது முற்பட்ட வகுப்பினர் தொடர்பான வழக்கெல்லாம் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.  ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு அவரது தாய் சோனியா காந்தி வந்தார்.

அதை அடுத்து அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் ராகுல் வீட்டுக்கு வந்தார்.  முன்னதாக கடந்த மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி,லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிகிறது ஏன் என்று விமர்சித்து இருந்தார். 

இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் தலைமை நீதித்துறை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் .  சுமார் 4 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 15,000 அபராதமும் விதிப்பதாக மேஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா நேற்று  வியாழன் கிழமை அன்று (23.3.2023) தீர்ப்பளித்தார்.

இதை அடுத்து ராகுல் காந்தி  தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது.  இதை ஏற்றுக் கொண்ட மேஜிஸ்திரேட் வர்மா அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி அவரது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.  இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில் குற்றவியல் வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தன்னை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.  எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 102 உட்பிரிவு (1) (e )ன்  கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் எனும் நிலையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம் தீர்ப்பு வெளியான நாளில் 23.3.2023 அன்று இருந்தே அமலுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகுதி நீக்கத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  ராகுல் காந்தியை கண்டு பாஜகவும் மோடியும் பயப்படுகிறார்கள் என்றே சொல்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த பாஜகவின் செயலுக்கு காங்கிரஸ் கட்சியினர் பல கண்டன ஆர்ப்பாட்டங்களையும் ரயில் மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க.!