chennireporters.com

ராமஜெயம் கொலை வழக்கு ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.

தமிழகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருந்த அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டு வருகிறது. கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 4 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி  கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு குறித்து தற்போது, எஸ்பி.செல்வராஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இந்த கொலை வழக்கு தொடர்பாக, சந்தேகத்துக்குரிய தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி, திருச்சி ஜே எம்- 6 நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, நீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார்.

 

அதன்பேரில், வெடிகுண்டு மோகன்ராம், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இன்று முதல் 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள தடயவியல் துறை நிபுணர்கள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் ரவுடிகள் தங்களது வாக்குமூலத்தில் என்ன சொன்னார்கள் என்பது விரைவில் தெரியவரும் பிறகு உண்மையான குற்றவாளிகள் யார் என்று அடையாளம் காணப்படும்.

இதையும் படிங்க.!