chennireporters.com

அமலாக்கத்துறை அதிகாரியை தட்டி தூக்கிய தமிழக போலீஸ். அலறும் டில்லி ஆட்டி படைக்கும் முதல்வர் ஸ்டாலின்.

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திண்டுக்கல் டாக்டரிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டல் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஈ.டி அதிகாரி கைது கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அஞ்சி நடுங்கியுள்ளனர். இதனால் டெல்லி கோட்டை ஆடிப்போய்யுள்ளது.அரசு டாக்டர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பிய அமலாக்கத்துறை அதிகாரியை 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.சோதனை நடத்தவிடாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாஜ ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை ஆளுநர் அல்லது அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர் அங்கித் திவாரி (32). இவர் 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, மத்தியப்பிரதேச அமலாக்கத்துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர், மகராஷ்டிரா (நாக்பூர்), குஜராத் ஆகிய மாநிலங்களில் அமலாக்கத்துறை உதவி அதிகாரியாக பணியாற்றி வந்தார். அங்கிருந்து ஆய்வாளர் அந்தஸ்துக்கு அமலாக்கத்துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, கடந்த ஏப். 23ல் மதுரைக்கு வந்துள்ளார். மதுரைக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையில் தென் மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் விவரங்களையும், வழக்குகளின் தகவல்களையும் கேட்டு வாங்கியுள்ளார்.அதில், திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த டாக்டர் சுரேஷ்பாபு என்பவர் மீதான வழக்கு ஆவணங்களையும் வாங்கியுள்ளார். சுரேஷ்பாபு, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது, கடந்த 2018ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இவரது மனைவி பெயரில் திண்டுக்கல்லில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது மருத்துவமனை மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, ஏராளமான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அங்கித் திவாரி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு, ‘உங்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு இருக்கிறது. இது பிரதமர் அலுவலகம் மூலம் அமலாக்கத்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. நாங்கள் விசாரணைக்கு எடுக்க போகிறோம். விசாரணைக்கு எடுத்தால் உங்களுடைய சொத்துகள் அனைத்தும் முடக்கி பறிமுதல் செய்வோம். இதை தவிர்த்து வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும். இது எனக்கு மட்டும் இல்லை. உயர் அதிகாரிகள் வரை கொடுக்க வேண்டும். பணம் தராவிட்டால், உங்களை மட்டுமல்லாமல் மருத்துவமனை உங்கள் மனைவி பெயரில் இருப்பதால் அவரையும் கைது செய்ய வேண்டியது வரும்’ என்று பேரம் பேசி உள்ளார்.

இதற்கு டாக்டர் சுரேஷ்பாபு மறுத்து உள்ளார். இருப்பினும் விடாமல் அவரை தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் கேட்டு தொடர்ந்து பேரம் பேசி வந்து உள்ளார். இறுதியாக ரூ.51 லட்சம் கொடு என்று அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டியுள்ளார். கடந்த மாதம் ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரி, டாக்டரின் வீட்டுக்குச் சென்று வாங்கியுள்ளார். அதன் பின்னர் மேலும் ரூ.31 லட்சம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.தீபாவளி முதல் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரியின் டார்ச்சரால் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் டாக்டர் சுரேஷ்பாபு புகார் கொடுத்து உள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய் குமார் சிங், இணை இயக்குனர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில், எஸ்பி சரவணகுமார் விசாரணை நடத்தினார். இதில் டாக்டர் சுரேஷ்பாபுவை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியது உறுதியானது. இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் கீதா ரூபராணி ஆகியோர் கொண்ட தனிப்படைஅமைக்கப்பட்டு, அங்கித் திவாரியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, டாக்டர் சுரேஷ்பாபு அங்கித் திவாரியை தொடர்பு கொண்டு ரூ.20 லட்சத்தை தருவதாக கூறி உள்ளார். உடனே அங்கித் திவாரி திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நகரின் பேகம்பூரை அடுத்துள்ள தோமையார்புரம் அருகே உள்ள டாக்டரின் வீட்டுக்கு நேற்று அதிகாலை டாக்டர் சுரேஷ்பாபுவை வர சொல்லி உள்ளார். அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தந்த ரசாயனம் தடவிய ரூ.20 லட்சம் பணத்துடன் அங்கித் திவாரி சொன்ன இடத்துக்கு டாக்டர் சுரேஷ்பாபு சென்று உள்ளார். அங்கு காரில் அங்கித் திவாரி காத்திருந்தார். டாக்டரை பார்த்ததும், பணத்தை கார் டிக்கியில் வைக்க சொல்லி உள்ளார். உடனே, ரசாயனம் தடவிய ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியின் கார் டிக்கியில் டாக்டர் வைத்து உள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை மடக்கி பிடிக்க சென்றனர். போலீசார் சாதாரண உடையில் இருந்ததால், என்ன நடக்கிறது என்று புரியாமல், அங்கித் திவாரி காரை படுவேகமாக மதுரை நோக்கி ஓட்டி சென்றார். உடனே, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் கீதா ரூபராணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அங்கித் திவாரியின் காரை விரட்டிச்சென்றனர். சுமார் 15 கி.மீ சென்ற அங்கித் திவாரியின் கார் கொடைரோடு சுங்கச்சாவடி டிராபிக்கில் மாட்டி நின்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்காரில்இருந்த லஞ்சப்பணம் ரூ.20 லட்சம், அவரது கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அங்கித் திவாரியை கைது செய்தனர். கைதான அங்கித் திவாரியிடம் திண்டுக்கல் இபி காலனியில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு காலை 9 மணிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் டிஎஸ்பி நாகராஜன் மற்றும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பின்னர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லிக்கு கொடுத்த தகவலின்பேரில், அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் மற்றும் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மார்க்கண்டய் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் வந்தனர். அவர்கள் அலுவலகத்துக்குள் பாதுகாப்புக்கு நின்றனர். ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் தமிழ்நாடு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்கித் திவாரி லஞ்சம் கேட்ட விவகாரத்தில் அவர் தனித்து செயல்பட்டு இருக்க மாட்டார் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அங்கித் திவாரியிடம் நடத்தப்படும் விசாரணையில், பலரை மிரட்டி லஞ்சம் வாங்கியது தெரியவந்து உள்ளது. இதில் அமலாக்கத்துறை உயரதிகாரிகளுக்கும் அங்கித் திவாரி பங்கு கொடுத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  பிரதமர் அலுவலகம் பெயரை சொல்லி மிரட்டல் அங்கித் திவாரி அறையின் பூட்டை உடைத்து சோதனை கைதான அங்கித் திவாரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தபோது, அவரது அறையில் டாக்டர் சுரேஷ்பாபு உள்ளிட்ட சிலரிடம் லஞ்சம் வாங்கியது மற்றும் சில ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ‘‘பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்திருப்பதாலேயே, உங்களிடம் விசாரணை நடத்த வந்துள்ளேன்’’ என்றும் அங்கித் திவாரி, டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டியுள்ளார். மேலும், லஞ்சப்பணம் கேட்டு தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பியும், வாய்ஸ் மெசேஜ் மூலமும் பணம் கேட்டுள்ளார். இந்த செல்போன் பதிவுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுதவிர, அங்கித் திவாரியின் வாக்குமூலத்தின் பேரில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள அவரது அறைக்குள் சோதனை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அங்கித் திவாரியின் அறை பூட்டப்பட்டிருந்ததால், அதைத் திறக்காமல் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாவியை தர மறுத்தனர். இதைத்தொடர்ந்து பூட்டை உடைத்து அறைக்குள் சென்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.*

டாக்டர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கு விவரங்கள் எப்படி கைதான அங்கித் திவாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு விவரங்களை ஆவணங்களாக அவரது வீட்டில் பதுக்கி உள்ளாரா அல்லது பென் டிரைவில் சேகரித்து வைத்து உள்ளாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை கோசாகுளம் புதூரில் உள்ள அங்கித் திவாரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அங்கித் திவாரியிடம் நடத்திய விசாரணையில், அவர் இது போல பல பேரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்துக் கொடுத்துள்ளார். அது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன.

அதுமட்டுமின்றி சென்னை, மதுரையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இந்த லஞ்ச ஊழலில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த தமிழக  லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் பல அதிகாரிகள் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நியைில், நேற்று இரவு சாஸ்திரி பவன் இழுத்து மூடப்பட்டு, துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இதையும் படிங்க.!