chennireporters.com

இன்ஸ்பெக்டரை மிரட்டிய டுபாக்கூர் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்.

அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் பகுதியை சார்ந்தவர் கபிலர்.  இவரது மகன் நெப்போலியன் இவர்  மீது அவரது மனைவி அம்பத்தூர் மகளீர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து நெப்போலியன் மனைவி அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் பேரில் கபிலர் அவரது மகன் நெப்போலியன் மற்றும் அவரது அம்மா மீது வரதட்சணை புகார் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது .

இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி நேற்று  ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கபிலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமியை என் குடும்பத்தார் மீது  நீ வழக்கு பதிவு செய்யக்கூடாது நான் யார் தெரியுமா?  தொலைச்சிபுடுவேன் . நானும் நீதிபதி தான் ஈ.பி. விஜிலென்ஸில் இருக்கிறேன் என்று இன்ஸ்பெக்டரை மிரட்டினாராம்.

அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.  காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டரை மிரட்டியதால் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராமசாமியிடம் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகார் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.  அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அருகிலேயே அமைந்துள்ளது மகளிர் காவல் நிலையம்.  பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய டுபாக்கூர் நீதிபதி மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை . இந்த கபிலர் மீது ஈபி யில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு பலரை ஏமாற்றியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது . அவர் நீதிபதியும் இல்லை என்று தெரிகிறது.

நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த கூடாது என்று பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய டுபாக்கூர் நீதிபதி மீது அம்பத்தூர் சட்ட ஒழுங்கு போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது மர்மமாக இருக்கிறது. ?

இன்ஸ்பெக்டர் ராமசாமி நடவடிக்கை எடுப்பாரா என்கின்றனர் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தரப்பினர்.  இதுகுறித்து நாம் அம்பத்தூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சியிடம் கேட்டபோது சம்பவம் நடந்தது உண்மை தான் .

என்னை சம்பந்தப்பட்ட நபர் மிரட்டியது உண்மைதான் அது தொடர்பாக நான் அம்பத்தூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன்.  அந்த புகாரின் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை என்னிடம் கேட்பதை விட நீங்கள் அந்த இன்ஸ்பெக்டரை தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று அவரது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார்.

 

இதையும் படிங்க.!