chennireporters.com

தமிழக புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் தமிழக அரசு உத்தரவு.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக  இருந்த சங்கர் ஜிவால் தமிழக காவல்துறை டிஜிபியாக நியமித்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையின்  சென்னை மாநகர  காவல் ஆணையராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்த சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் தற்போது தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியை பூர்வீகமாக கொண்ட சங்கர் ஜிவால் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து, பின் PGDM – Management, MS ஆராய்ச்சி படித்து முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்

தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்திரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியில் புலமை பெற்றவர். படிப்பை முடித்ததும் சில ஆண்டுகள் செய்ல் (SAIL – ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா), பெல் (BHEL – பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்) நிறுவனத்திலும் இன்ஜினியராக பணிபுரிந்தவர். அதன் பின் அந்த வேலைகளை துறந்து ஐ.பி.எஸ் படித்து தேர்வானார்

1990 ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சங்கர் ஜிவால், முதன்முறையாக, 1993 ம் ஆண்டு மன்னார்குடியில் ஏ.எஸ்.பியாக தனது  பணியைத் தொடங்கி அதன் பின் 1994 ம் ஆண்டு சேலம் ரூரல் பகுதி ஏ.எஸ்.பியாக பணியாற்றினார்.

1995 ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அதன்பின்பு மதுரை மற்றும் TSP 6 வது பட்டாலியனில் பணியாற்றி பின் 2000-ம் ஆண்டு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தென்மண்டல இயக்குநராக பொறுப்பேற்றார்.

2004 ம் ஆண்டு டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் போதைபொருள் கடத்துபவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதோடு நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலான ஹெராயின் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்த பெருமைக்குரியவராக திகழ்ந்தார்.

2006-ம் ஆண்டு திருச்சி மாநகர ஆணையராக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் இ-சலான்கள், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் பூட்டிய வீடுகளை எஸ்எம்எஸ் மூலம் கண்காணித்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். 2008 ஆம் ஆண்டு ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்ற சங்கர் ஜிவால் 2011- ம் ஆண்டு வரை தமிழக உளவுத்துறை ஐ.ஜியாக பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டின் உள் பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவை நிறுவுவது, மாநிலத்தின் புலனாய்வுப் பிரிவுகளின் தொழில்நுட்ப கண்காணிப்புத் திறனை நவீனமயமாக்குவதில் சிறந்து விளங்கினார்.

அதன் பின்னர், சத்தியமங்கலம் வனத்துறையில் 6 ஆண்டுகளாக சிறப்பு அதிரடிப்படை(STF) தலைவராக இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில் வனப்பகுதிகள் வழியாக அந்நிய சக்திகள் ஊடுறுவல், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத சக்திகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தினார். 2015 ம் ஆண்டு ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்ற சங்கர் ஜிவால், 2021 ம் ஆண்டு ஏ.டி.ஜி.பியாகவே இருந்து சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார். பின்னர் அதே 2021 ம் ஆண்டில் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் ஆணையராக தொடர்ந்தார்.

இவர் சென்னை காவல் ஆணையராக இருந்த காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்தினார். மேலும் பல போக்குவரத்து சீர்திருத்தங்களையும், போக்குவரத்து திட்டங்களையும் கொண்டு வந்தார். மேலும், உலக புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மிகச்சிறப்பான பாதுகாப்பு வழங்கி சிறு பாதுகாப்பு குறைகளும் இல்லாமல் போட்டி நடந்தேற காரணமாக இருந்து பாராட்டுகளை பெற்றார்.
இவரது சிறப்பான காவல்துறை சேவைக்காக 2017 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் இரண்டுமுறை மத்திய அரசு, குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இதையும் படிங்க.!