chennireporters.com

தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு.

தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்றும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு திமுக ஆட்சி காலம் கேடுகாலமாக அமைந்துவிட்டதோ? என்றும் மாமன்னன் ராஜராஜ சோழன் வெட்டிய சமுத்திரம் ஏரி, கழிவுநீர் குட்டையாக காட்சியளிப்பது வேதனை அளிக்கிறது எனவும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் மூணரை லட்சம் ஏக்கரில் கருகத் தொடங்கி விட்டது. ஒன்னரை லட்சம் ஏக்கரில் மட்டுமே நிலத்தடி நீரை நம்பி சாகுபடி தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில், ஏன் நம் நாட்டிலும் கூட அரிசி கேட்டு போராட்டம் வெடித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் காவிரி நீர் இன்றி முப்பது லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயி கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். முதலமைச்சர் கண்டுகொள்ள மறுக்கிறார். திமுக ஆட்சி காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கேடுகாலமாக அமைந்து விட்டதோ? என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.

குறுவை இழந்த விவசாயிகள், சம்பா பணியையும் துவக்க முடியாமல் நம்பிக்கை இழந்து உள்ளார்கள். மேட்டூர் அணையில் 60 அடிக்கு கீழே தண்ணீர் குறைந்துவிட்டது. கர்நாடகா அணைகளில் நிரம்ப தண்ணீர் இருந்தும் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு வாய் திறக்க மறுக்கிறது. இதனால் நடப்பாண்டு தமிழ்நாட்டில் 30 லட்சம் மெட்ரிக்டண் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தட்டிக் கேட்க தமிழக முதலமைச்சர் தயங்குவது வேதனை அளிக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தை கூட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்திப்பதற்கு கூட அமைச்சர்கள் குழுவையோ, அதிகாரிகள் குழுவையோ அனுப்பி வைக்க கூட தமிழக அரசு மறுத்துள்ளது.

காவிரி உட்பட அனைத்து ஆறுகளிலும் கழிவு நீர் கலந்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி பார்த்தால் காவிரியில் கர்நாடக மாநிலத்தில் 38 சதவீதம் மட்டுமே கழிவுநீர் கலப்பதாகவும் 62 சதவீத கழிவு நீர் தமிழ்நாட்டுக்குள் ஓடக்கூடிய இடங்களில் கலப்பதாகவும் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தஞ்சாவூரில் உலகப்பிரசித்தி பெற்ற ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட சமுத்திரம் ஏரி ஆன்மீக தலமான தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் இருந்து வெளியேற்றக்கூடிய கழிவுநீர் முழுமையும் இந்த ஏரிக்கு கால்வாய் அமைத்து கலக்க செய்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த சமுத்திரம் ஏரியும் கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக வேளாண் துறை விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய மானிய சலுகைகள் குறிப்பாக மண்வெட்டி, கடப்பாறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குகிற மானிய திட்டத்திற்கான கோப்புகள் உட்பட பல்வேறு கோப்புகளை தமிழ்நாடு அரசு நிதித்துறை செயலாளர்கள் நிறுத்தி வைத்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு சென்றடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சென்னையில் சத்தியாகிரகப் போராட்டத்தை துவங்க உள்ளோம் என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் காவலூர் செந்தில்குமார், செயலாளர் பாட்ஷா ரவி, மாநகர செயலாளர் அறிவு உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க.!