chennireporters.com

விடை பெற்றார் இறையன்பு ஐ.ஏ.எஸ்…..

அமைதிக்கும் , நேர்மைக்கும் பெயர் போன ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு தனது 35 ஆண்டுகாள பணியை முடித்து இன்று ஓய்வு பெறுகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாரட்டு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசின்  தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ்,தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும்  கடந்த 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார்.1988-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தவர்.

1990-ம் ஆண்டு நாகப்பட்டினம் உதவி கலெக்டராக தனது ஐ.ஏ.எஸ். பணியை தொடங்கியவர். காஞ்சிபுரம் கலெக்டர், செய்தித்துறை, சுற்றுலாத்துறை என பல துறைகளில் செயலாளர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயலாளர்,  இயக்குனர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர் இறையன்பு.  எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் தனது கடமையை நிறைவேற்றி வந்தவர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இவர் வித்தியாசமானவர். சமூக அக்கறை கொண்டவர். எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் குறிக்கோளாக கொண்டவர்.

தான் மட்டுமல்லாமல் தன்னை போன்று எளிமையாகவும், நேர்மையாகவும் பணியாற்றியவர்களை தட்டிக்கொடுக்க மறவாதவர். தனது பணிக்காலத்தில் நேர்மையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள் முதல் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் வரை என அத்தனை பேரையும் நேரில் வரவழைத்து அவர்களது நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கி உற்சாகமூட்டியவர்.

1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் வெங்கடாசலம்-பேபி சரோஜா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த இறையன்பு பள்ளி பருவத்திலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தனது பயணத்தை தொடங்கினார்.இவரது மூத்த சகோதரர் திருப்புகழ், குஜராத் மாநிலத்தில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி. பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பாராட்டை பெற்றவர்.

பி.எஸ்சி. (வேளாண்மை) பட்டப்படிப்பை முடித்த இவர், வணிக மேலாண்மை, ஆங்கில இலக்கியம், தொழிலாளர் மேலாண்மை, உளவியல் பிரிவில் முதுகலை பட்டமும், வர்த்தக நிர்வாகம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் இறையன்பு.

பி.எஸ்சி. (வேளாண்மை) பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். அரசு பணிகளுக்கு மத்தியிலும் இதுவரை 154 புத்தகங்களை எழுதி உள்ளார். எந்த நிலையிலும் அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக இருந்தவர்.

இதன் காரணமாக தலைமை செயலாளராக பொறுப்பேற்றதும் தான் இந்த பதவியில் இருக்கும் வரை தான் எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வாங்கக்கூடாது என்றும், அரசு விழாக்களின் போது தான் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாக தரக்கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தவர்.தொழில்நுட்ப வளர்ச்சியை சுட்டிக்காட்டி ஊராட்சி பகுதிகளில் தண்டோரா மூலம் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளுக்கு எதிராக கருத்துகள் வெளியான போது, இனிமேல் தண்டோரா மூலம் எந்த அறிவிப்புகளும் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

சாதி பாகுபாடு காரணமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் கொடியேற்ற மறுக்கப்படுவதை அறிந்து இதுபோன்ற நாட்களில் ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தவர்.

இத்தனை பெருமைக்குரிய ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்புவின் பணிக்காலம் எந்த காலத்திலும் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் எளிய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இதையும் படிங்க.!