chennireporters.com

கிரிக்கெட் பேட்டிற்கு புரோகிதர்களிடம் “சத்குரு சம்ஹார யாகம்” நடத்த சொன்ன க்ளென் மேக்ஸ் வெல்.

ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி நடந்து வரும் வேளையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தும் பதிவு ஒன்று கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது தான் அந்த பதிவு.

இந்த பதிவை முமுவதுமா படித்து விட்டு சிரிக்காதவர்கள், இரத்தம் கக்கி சாவார்கள் செய் சிரி ராம் 🤣🤣🤣

கிளென் மேக்ஸ்வெல், வினி ராமனை  ஹிந்து சனாதன தர்மத்தின்படி திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் அப்போது அவர் ஒரு ரகசியமான காரியம் செய்தார். தனது திருமணத்தின் போது அவர் தான் கிரிக்கெட் விளையாடும் பேட்டையும் கொண்டு வந்திருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அது ஏன் என்று புரியவில்லை.

ஆனால் க்ளென் மேக்ஸ்வெல்லின் திட்டமே வேறு அவர் தனது திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களிடம் தனது பேட்டைக் கொடுத்து அதற்கெனத் தனியாக “சத்ரு சம்ஹார” யாகம் வளர்த்து, வேத மந்திரங்களைக் கூறி, சக்தியேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அந்த வேத விற்பன்னர்களும் அப்படியே செய்தனர். ஆனால் அவர்கள் சனாதன ஹிந்து மதக் காப்பாளர்கள் என்பதால் மேக்ஸ்வெல்லுக்கு இரண்டு கண்டிஷன்கள் வைத்தார்கள். அது என்ன தெரியுமா?

“நாங்கள் உங்கள் பேட்டுக்கு சக்தி ஏற்றிக் கொடுக்கிறோம், ஆனால் அதை நீங்கள் ஹிந்து தர்மத்தைக் காக்கும் பாரத தேசத்துக்கு எதிராக மட்டும் பயன்படுத்தக் கூடாது, வேறு வழியே இல்லாத, ஸ்பெஷல் ஆட்டம் தேவைப்படும்போது, அதுவும் பாரதம் அல்லாத அணிக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்று சொன்னார்கள்.

மேலும் இரண்டாவது கண்டிஷனாக “இந்த பேட்டின் சக்தியை மனதால் சந்தேகப்பட்டு சோதித்துப் பார்க்கக் கூடாது, அதனால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும்” என்றும் எச்சரித்தார்கள். மேக்ஸ்வெல்லும் அதை ஏற்றுக் கொண்டார்.

நேற்று 90 ரன்களுக்கு 7 விக்கெட் என்று ஆஸ்திரேலிய அணி தத்தளித்தபோது, அவரது பேட்டுக்கு சத்ரு சம்ஹார யாகம் செய்து கொடுத்த வேத விற்பன்னர்கள் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்பு கொண்டு, மேக்ஸ்வெல் இப்போது விருப்பப்பட்டால் அந்த ஸ்பெஷல் பேட்டைப் பயன்படுத்தலாம் என்று பச்சை ச்சேச்சே காவிக்கொடி காட்டினார்கள்.

அந்த சிக்னலைப் புரிந்து கொண்ட மேக்ஸ்வெல் அந்த சக்தி வாய்ந்த பேட்டை எடுத்துக்கொண்டு களமிறங்கினார். அதுவும் யாருக்கு எதிராக என்பது இன்னேரம் இந்த உலகத்துக்கே தெரிந்திருக்கும்.

ஆனால் களத்துக்குள்ளே போன பிறகு, வேத விற்பன்னர்களின் எச்சரிக்கையையும் மீறி, மேக்ஸ்வெல்லுக்கு தனது பேட்டின் சக்தி பற்றிய சந்தேகம் வந்துவிட்டது. தெருமுனையில் விளையாடும் பில்லக்கா பசங்கள் கூட ஒற்றைக் கையால் அசால்டாகப் பிடிக்கும்படி இரண்டு கேட்ச் கொடுத்து தனது பேட்டின் சக்தியை சோதித்துப் பார்த்தார். பந்தோ, சனாதன எதிரிகளின் கைகளுக்கே போனாலும் நழுவிக் கீழே விழுந்தது. ரன்களுக்கு ஓடாமல் நடந்து பார்த்தார். அந்த பேட் இருக்கும் வரை அவரை ரன் அவுட் மட்டுமல்ல, வாக் அவுட் கூட செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்.

பிறகு அவர் செய்ததெல்லாம் சும்மா நின்று கொண்டு அந்த பேட்டால் பந்தைத் தொட்டது மட்டும்தான். அந்த சக்தியேற்றப்பட்ட பேட்டில் பட்ட எல்லா பந்துகளும் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் அலறியடித்துக் கொண்டு பறந்தன.

ஆரம்பத்தில், வேத விற்பன்னர்களின் எச்சரிக்கையையும் மீறி, சத்ரு சம்ஹார யாகத்தின் மகிமையையும், வேத மந்திரங்களின் சக்தியையும் சந்தேகப்பட்ட ஒரே காரணத்துக்காக மேக்ஸ்வெலுக்கு உடலெங்கும் க்ராம்ப் வந்து நடக்கவே சிரமப்படவும் நேர்ந்தது என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இதுவே நமது வேத மந்திரங்களின், சத்ரு சம்ஹார யாகங்களின் சக்தி. இந்த பதிவை எழுதியவர்க்கு  பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இதையும் படிங்க.!