chennireporters.com

பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா.

ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மார்க்ரம், தனது விக்கெட்டை பறிகொடுத்ததால், ஆட்டம் பரபரப்பானது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை சென்னையில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்கியது.அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அப்துல்லா 9 ரன்னிலும், இமாம் உல் ஹாக் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து கேப்டன் பாபருடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தார். சிறிது அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான், 31 ரன்கள் எடுத்த நிலையில் கேட்சாகி ஆட்டமிழந்தார்.அடுத்துவந்த இப்திகார் அகமது 21 ரன்கள் எடுத்த நிலையில், சிக்ஸ் அடிக்க முயன்று கேட்சாகி அவுட்டானார். தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிவந்த கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்த நிலையில், ஆட்டமிழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 141 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. இதன் பின்னர் சவுத் சகீல் மற்றும் ஷதாப் கான் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவ்வப்போது பவுண்டரிகளையும் விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. சவுத் சகீல் அரைசதம் அடித்து 52 ரன்னிலும், ஷதாப் கான் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தவறினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் பவுமா 28 ரன்னிலும், டி காக் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த வான் டர் டசன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. கிளாசென் 12 ரன்னிலும், டேவிட் மில்லர் 29 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், அனுபவ வீரரான எய்டன் மார்க்ரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் உயர முக்கிய பங்காற்றினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்க்ரம் 91 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற 2 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டம் பரபரப்பானது.

கடைசியில் தென் ஆப்பிரிக்க அணி ஒன்று, இரண்டு ரன்களாக எடுத்து வெற்றி இலக்கை கடந்தது. இதன் மூலம் பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. அத்துடன் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது

இதையும் படிங்க.!