23வயது பழங்குடி முதல் பெண் நீதிபதி!
பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி ஸ்ரீபதி.
ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று பி.ஏ.பி.எல்,சட்டப்படிப்பை முடித்து,படிப்பின் இடையிலேயே மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர்.
இன்று இவரைப்பற்றி தெரிந்தவர்கள் அனைவரும் நீதிபதி ஸ்ரீபதியைப் பாராட்டி போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயது (23),
அவருடைய இனமா, அல்லது அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா, என்றால் இவை மூன்றுமே எனலாம்.
ஆனால் நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன் இந்தத் தகவலைக் கேட்டபோது.ஏனெனில் ஸ்ரீபதிக்கு நீதிபதி தேர்வு வரும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன் குழந்தையும் பிறந்து விட்டது.
ஆனால் தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார் இவர். ” குழந்தை பிறந்த இரண்டாவது நாள் பயணிப்பது என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். டாக்டரின் ஆலோசனைப்படி வேறெப்படி பத்திரமாக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன். (பரமு, ஸ்ரீபதி இணையரின் நண்பர் ஒரே ஊர்).
கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து,வெறும் காரை, பாதுகாப்பான,
சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை சென்றார். தேர்வு எழுதினார்.இதோ அத்தேர்வில் வெற்றி வாகையும் சூடியிருக்கிறார்.
உண்மையாகவே இப்போது நினைத்துப்பார்த்தால் “ஏய் எப்புட்றா?” என்று சொல்வதற்கு முன் தொண்டைக்குழிக்குள் திக் திக் அடிக்கிறது.இரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று தெரியவில்லை எல்லாம் அவரின் மன பலம் தான்.அதைவிட பெருமைப்படவும் பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், இவர் ஸ்ரீபதியின் இணையர். பிள்ளை தான் முக்கியமென்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் இவர் தான் உண்மையிலேயே வாழும் பெரியார் என்று ஸ்ரீபதியின் கணவருக்கு சமூக வலை தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்து ஸ்ரீபதியின் தாய் கட்டிக்கொடுத்த ஊரில் இருந்தால் பிழைக்க முடியாது என்றெண்ணி, தன் சொந்த ஊருக்கே சென்று, அங்குள்ள பள்ளியில் தன்மகளைச் சேர்த்துப் படிக்கவைத்த அவரின் வைராக்கிய குணம்தான் ஸ்ரீபதிக்கு முன்னேற்றத்திற்கு படிகல்லாக அமைந்துள்ளது.
இணையேற்பு முடிந்து ஸ்ரீபதி அந்த ஊரில் நடக்கும் ஒரு கிராமசபையில் பங்கேற்று, கிராம வளர்ச்சித் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கியுள்ளார். எல்லோரையும் போல அரசியல் பெருமகனார்கள் “இதுக எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போவுதுங்கனு நாங்களும் பார்க்கிறோம்” என்று எகத்தாளமாக முதுகுக்குப் பின்புறம் பேசியுள்ளனர். இதோ அதையெல்லாம் கடந்து இன்று வெற்றியும் கண்டுள்ளார் ஸ்ரீபதி
இனி யாருக்கு வயிற்றில் புளிக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்று தான் தெரியவில்லை. யார் சொன்னால் எல்லோருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு எங்கள் வலியைத் தெரிந்த, உணர்ந்த,புரிந்த ஒருவர் சென்றிருப்பது அவ்வளவு நிம்மதியாகவும் பெருமையாகவும் பக்க பலமாகவும் உள்ளது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று அன்றே எழுதிவைத்துச் சென்ற எங்கள் முதல்வருக்கு நன்றி என்று உடன் பிறப்புகளும் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
தன்னிடம் படித்த மாணவி இன்று சமூகம் போற்றும் நிலைக்கு ஆளாகி இருப்பதைக் கண்டு ஆனந்தத்தில் துள்ளி குதித்து இந்த செய்தியை தனது முகநூல் பக்கத்தில் பாராட்டி எழுதி பகிர்ந்து வருகிறார் ஸ்ரீபதியின் பள்ளி ஆசிரியர் மகாலட்சுமி. ஸ்ரீபதிக்கு பாடம் கற்றுத் தந்த மகாலட்சுமி உண்மையிலேயே அவர் மகாலட்சுமி தான். நாமும் போற்றுவோம் ஸ்ரீபதியின் ஆசிரியர் மகாலட்சுமியை. ஸ்ரீபதிக்கும் அவரது ஆசிரியர் மகாலட்சுமி அவர்களுக்கும் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் இணையதளத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.