chennireporters.com

திருவேற்காடு கூவம் ஆற்றில் நஞ்சு! செத்து மிதக்கும் மீன்கள்.

ஆவடி அடுத்துள்ள திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதியில் கூவம் ஆறு செல்கிறது.  இன்று காலை இந்த ஆற்றில்  அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.  இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை கொண்டு கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இந்த பகுதியில் மட்டும் நான்கு டன்களுக்கு மேலாக ஜிலேபி மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை கொண்ட மீன்களாக இருந்தது. மேலும் செடிகளுக்கு மத்தியில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதால் செடிகளை அப்புறப்படுத்தி விட்டு இறந்து கிடந்த மீன்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். எனவே இந்த கூவத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீரை விட்டு செல்வதாகவும் தனியார் நிறுவனங்களில் இருந்து இரசாயனங்கள் கூவத்தில் கலப்பதால் தான் மீன்கள் செத்து மிதக்க காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் மீன்கள் இறந்திருக்கலாம்  என்கின்றனர். மேலும்  நச்சு கலந்த நீர் ஆற்றில் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து இறந்து போன மீன்களை எடுத்து சென்று ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் வேறு ஏதேனும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது டன் கணக்கில் அங்கு மீன்கள் செத்து மிதப்பதால் அந்தப்பகுதியில்  துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில்  போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேறு வழியாக  சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது கூவத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.!