chennireporters.com

கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவி கைது.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை ஓட்டேரியில் கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவி போலீசார் கைது செய்தனர் இந்த செய்தி சென்னை மாநகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி வாழைமா நகர் 9வது தெருவை சேர்ந்தவர் பிரதீப் (43). இவருக்கு திருமணமாகி பிரீத்தா (41) என்ற மனைவியும், ஒரு மகளும் ஒரு மகனும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான பிரதீப் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதே போல் நேற்று இரவு வழக்கம் போல் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பிரதீப் தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா தனது கணவரிடம் இருந்து மகளை மீட்க போராடியுள்ளார்.

இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது ஆத்திரமடைந்த பிரதீப் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது இதில் கோபம் அடைந்த பிரீத்தா வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து கணவர் பிரதீப் மண்டையில் அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த பிரதீப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.பின்னர் பிரீத்தி இது குறித்து உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தை அடுத்து அங்கு வந்த உறவினர்கள் பின்னர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பிரதீபின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவி பிரீத்தாவை கைது செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மகள்,மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் பகுதியில் திருநங்கை ஒருவரிடம் குடி போதையில் இருந்த ஒருவர்.

தவறாக நடக்க முயன்ற போது தன்னை தற்காத்துக்கொள்ள பாட்டிலை எடுத்து உடைத்து அந்த இளைஞரை கொலை செய்தார் அந்த சம்பவத்தில் அந்த திருநங்கை மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதுகாப்பிற்காக தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்த நடவடிக்கை என்று அவர் விடுவிக்கப்பட்டார்.

அதேபோல கவரப்பேட்டை பகுதியில் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் வடநாட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அவர் கொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கிலும் அந்தப் பெண் மீது போலீசார் பாதுகாப்பிற்காக நடந்த கொலை என்று வழக்கு பதிவு செய்து அவரையும் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!