chennireporters.com

ஆளுநர் உரையை விமர்சித்த முதல்வர், பாதியில் வெளியேறிய ஆளுநர். 

தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி முழுமையாகப் படிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து பேரவை முடிவதற்கு முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார். இதனால் சட்ட மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து ஆளுநர் தனது உரையை  படிக்க தொடங்கிய பொழுது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

தமிழ்நாடு தொடர்பான அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, `புறக்கணிப்போம் புறக்கணிப்போம் ஆளுநர் உரையை புறக்கணிப்போம்` என்றும், `வாழ்க தமிழ்நாடு` என்றும் கோஷங்களை எழுப்பியதோடு, உரையை புறக்கணித்து வெளியேறினர்.

மேலும், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் பெயர்களையும் ‘திராவிட மாடல் அரசு’ என்ற வார்த்தைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையிலிருந்து படிக்காமல்  புறக்கணித்தார்

ஆளுநர் தனது உரையில், மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சமத்துவபுரத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவது, காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, குறைந்த நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது என அரசின் திட்டங்கள் குறித்து சுமார் 50 நிமிடங்களுக்குப் பேசினார்.

தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசித்ததைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார். ஆளுநர் தவிர்த்த பகுதிகள் என்ன?
ஆளுநர் தனது உரையில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

இதனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற பகுதியை வாசிக்காமல் தவிர்த்துள்ளார். இதேபோல், உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் அவர் வாசிக்காமல் தவிர்த்தார்.

இதைத் தொடர்ந்து அவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையானது தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

 

திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.

சட்டப்பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு அரசமைப்பு சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்த ஆளுருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கேகூட அவர் மாறாக நடந்துகொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று என்று குறிப்பிட்டார்.

மேலும், சட்டமன்றப் பேரவை விதி 17ஐ தளர்த்தி, அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும்.

இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்ற தீர்மானங்களை முன்மொழிவதாகவும் பேசினார்.முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பேரவை முடிவு பெறுவதற்கு முன்பே, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர், சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையைத்தான் கேட்க வந்தோம். முதல்வர் உரையை அல்ல. ஆளுநர் பேரவையில் இருக்கும்போது முதல்வர் பேசுவது என்பது அவை மரபுக்கு எதிரானது. ஆளுநர் உரையில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆளுநர் வாசித்தது வெற்று உரை,” என்று தெரிவித்தார்.

 

இதையும் படிங்க.!